இந்தியாவின் மூன்று படைப்புகள் ஆஸ்கர் விருது விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.
திரையுலகைப் பொறுத்தவரையில் உயரிய விருதாக கருதப்படுவது, ஆஸ்கர். ஒவ்வொரு ஆண்டும் ஆஸ்கர் விருது யாருக்கு, எந்த படைப்புக்குச் செல்கிறதென்பதை குறித்து பல்வேறு கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் நிகழும்.
அந்த வகையில், வருகிற 2023-ஆம் ஆண்டு மார்ச் 12-ஆம் தேதி அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெறவுள்ள 95-ஆவது ஆஸ்கர் விழா குறித்த கணிப்புகளும், எதிர்பார்ப்புகளும் ரசிகர்களிடையே அதிகரித்துவிட்டன. குறிப்பாக இந்தியாவில் ஆஸ்கர் விருதுகள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன.
இந்நிலையில், ஆஸ்கர் விருதுக்கான இறுதி நாமினேஷன் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ பாடல் சிறந்த ஒரிஜனல் பாடலுக்கான பிரிவில் நாமினேட் செய்யப்பட்டுள்ளது.
மேலும், இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்ட ‘ஆல் தட் பிரீத்ஸ்’ சிறந்த ஆவணப் படத்துக்கான பிரிவிலும், ‘தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்’ சிறந்த ஆவண குறும்படத்துக்கான பிரிவிலும் நாமினேட் செய்யப்பட்டுள்ளது. மொத்தத்தில் இந்தியாவின் மூன்று படைப்புகள் ஆஸ்கர் விருது விழாவின் இறுதி நாமினேஷன் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.
முன்னதாக, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘நாட்டு நாட்டு’ கோல்டன் குளோப் விருதை சிறந்த ஒரிஜனல் பாடல் என்ற பிரிவின் கீழ் பெற்றது குறிப்பிடத்தக்கது.
மோடிக்கு எதிரான ஆவணப்படத்தை திரையிட முயன்ற மாணவர்கள்; தாக்குதல் நடத்திய மர்மநபர்கள்