இந்திய கிரிக்கெட் வீரர் ராபின் உத்தப்பா அனைத்து விதமான கிரிகெட் போட்டிகளிலிருந்தும் ஓய்வு பெறுவதாக தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தார்.
கர்நாடகத்தைச் சேர்ந்த உத்தப்பா, இந்திய அணிக்காக 2006 முதல் 2015 வரை 9 ஆண்டுகள் விளையாடி, ஒருநாள் மற்றும் இருபது ஓவர் போட்டிகளில் மொத்தமாக 1183 ரன்கள் அடித்திருக்கிறார்.
மேலும், கடந்த 2006-ம் ஆண்டு இங்கிலாந்துக்கு எதிரான ஒன் டே கிரிக்கெட் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த உத்தப்பா, ஒருநாள் போட்டியில் கடைசியாக 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிரான ஆட்டத்தில் விளையாடியிருந்தார்.
இருபது ஓவர் போட்டியில் 2007-ம் ஆண்டு ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தின் மூலம் அறிமுகமான இவர், இருபது ஓவர் வகைப்போட்டியில் 2015-ம் ஆண்டு ஜிம்பாப்வேக்கு எதிராக கடைசியாக விளையாடினார்.
ராபின் உத்தப்பா 2007 உலக கோப்பை வென்ற இந்திய அணியிலும், ஐபிஎல் தொடரில் 2014 -ம் ஆண்டு கொல்கத்தா அணி கோப்பையை கைப்பற்றிய போதிலும், 2021-ம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கோப்பையை கைப்பற்றிய போதிலும் இவர் அந்தந்த அணிகளுக்காக விளையாடியுள்ளார்.
இதையும் படிங்க: இங்கிலாந்தை வீழ்த்துமா…இந்திய அணி? – இன்று நடைபெறும் டி20 இறுதிப்போட்டி!
இந்நிலையில், ராபின் உத்தப்பா தனது ட்விட்டர் பக்கத்தில் தனது ஓய்வு முடிவை நேற்று அறிவித்தார். அவர் வெளயிட்டுள்ள பதிவில், நான் 20 வருடங்களாக கிரிகெட் விளையாடி வருகிறேன். நான் என்னுடைய நாட்டுக்காகவும் மாநிலத்திற்காகவும் விளையாடியது மகிழ்ச்சி. இந்த பயணம் ஏற்ற இறக்கங்கள் கொண்ட பயணமாகவும், மனநிறைவான பயணமாகவும், மகிழ்ச்சியாகவும், ஒரு மனிதனாக நான் வளர்வதற்கு எனக்கு உதவிய பயணமாக இருந்தது.
ஆனால் எல்லா நல்ல விஷயங்களும் ஒரு முடிவிற்கு வந்தாக வேண்டும். அதனால் நான் அனைத்து விதமான கிரிகெட் போட்டியிலிருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு செய்துள்ளேன். இனி நான் எனது குடும்பத்தினருடன் புதிய அத்தியாயத்தை தொடங்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.
மேலும், அவரது கிரிக்கெட் பயணத்திற்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.