கோவாவில் முன்னாள் முதல்வர் திகம்பர் காமத் உள்பட காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர், ஆளும் பாஜகவில் நேற்று இணைந்துள்ளனர்.
கடந்த மார்ச்சில் 40 உறுப்பினர்களைக் கொண்ட கோவா சட்டப்பேரவைக்கு தேர்தல் நடைபெற்றது. இதில் 20 இடங்களில் வெற்றி பெற்ற பாஜக, ஆட்சியைத் தக்கவைத்தது. காங்கிரஸ் கட்சி 11 இடங்களில் வெற்றிப்பெற்றிருந்தது.
இந்நிலையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் மற்றும் மாநில பாஜக தலைவர் சதானந்த் தனாவடே ஆகியோர் முன்னிலையில் 8 எம்எல்ஏக்களும் பாஜகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதனால், தற்போது கோவாவில் வெறும் 3 எம்எல்ஏக்கள் மட்டுமே எஞ்சியிருக்கின்றனர்.
மேலும், 8 காங்கிரஸ் எம்எல்ஏக்களின் வரவால் பாஜகவின் பலம் 28-ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, காங்கிரஸ் எம்எல்ஏக்களின் பேரவைக் கட்சி கூட்டம் நடத்தப்பட்டது. இதில், திகம்பர் காமத், மைக்கேல் லோபோ, கேதார் நாயக், ராஜேஷ் பால்தேசாய், டேலிலா லோபோ, சங்கல்ப் அமாங்கர், அலெக்ஸோ சிகியூரா, ருடால்ஃப் ஃபெர்னாண்டஸ் ஆகிய 8 எம்எல்ஏக்கள் பங்கேற்று, பாஜகவில் இணைய தீர்மானம் நிறைவேற்றினர். 3 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் மட்டும் இதில் பங்கேற்கவில்லை.
இதுகுறித்து முதல்வர் சாவந்த் கூறுகையில், ‘பேரவையில் பாஜகவின் பலம் அதிகரித்துள்ள நிலையில், அமைச்சரவை மாற்றம் குறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை. ஒட்டுமொத்தமாக 33 எம்எல்ஏக்களின் ஆதரவு பாஜகவுக்கு உள்ளது. கோவாவில் இருந்து காங்கிரஸை வழியனுப்பும் யாத்திரை தொடங்கியுள்ளது’ என்றார்.
மேலும், கோவாவில் கடந்த 2019-ம் ஆண்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 10 பேர் பாஜகவுக்கு இதேபோல் குழுவாக அணி மாறினர் என்பது குறிப்பிடத்தக்கது.