சென்னை, பெரம்பூரில் நகைக்கடையின் ஷட்டரை துளையிட்டு 9 கிலோ தங்கம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலையில் வசித்து வருபவர் ஸ்ரீதர். இவருக்கு வயது 36. இவரது வீட்டின் முதல் தளத்தில் இவர் ஜே.எல்.கோல்ட் பேலஸ் என்ற பெயரில் 8 ஆண்டுகளாக நகைக்கடை நடத்தி வருகிறார். மேலும், வீட்டின் இரண்டாவது தளத்தில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், நேற்று இரவு ஊழியர் நகைக்கடையை பூட்டி சாவியை ஸ்ரீதரிடம் கொடுத்துவிட்டு சென்றார். இதையடுத்து இன்று காலை 9 மணி அளவில் ஸ்ரீதர் கடையை திறப்பதற்காக வந்தார். அப்போது கடையின் முன்பக்க ஷட்டர் வெல்டிங் மிஷின் கொண்டு துளையிடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பிறகு உள்ளே சென்று பார்த்தபோது, லாக்கர் துளையிடப்பட்டு அதில் இருந்த 9 கிலோ தங்க நகைகளும் 20 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வைரங்களும் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து, ஸ்ரீதர் திருவிக காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
‘யார் இந்த பேய்கள்’ – இளையராஜா இசையில் யுவனின் குரலில் முக்கிய காணொளி!