புதுச்சேரியில் நடைபெற உள்ள காவலர் தேர்வில் ஊர்க்காவல் படையினருக்கு இடஒதுக்கீடு வழங்க கோரி அமைச்சர் நமச்சிவாயத்திடம் ஊர்காவல்படை பெண்கள் கோரிக்கை வைத்தனர்.
புதுச்சேரி அரசுத்துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு அரசு அறிவிப்புகளை வெளியிட்டு வருகின்றது. அதன்படி காவல்துறையில் 60 உதவி ஆய்வாளர் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அடுத்தபடியாக காவலர்களை நியமிப்பதற்கான அறிவிப்புகள் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் காவல்துறையில் ஊர்க்காவல் படையினராக பணிபுரியும் ஏராளமான பெண்கள் சட்டப்பேரவை வளாகத்தில் உள்துறை அமைச்சர் நமச்சிவாயத்தை சந்தித்து கோரிக்கை மனு அளித்தனர்.
அதில் நடைபெற உள்ள காவலர் தேர்வில் மகளிர் ஊர்க்காவல் படையை சேர்ந்தவர்களுக்கு சீனியாரிட்டி அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்கவேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். தாங்கள் பணிக்கு வந்து பல ஆண்டு காலம் ஆவதால் தற்போது நடத்தப்பட உள்ள உடல்தகுதி தேர்வில் தாங்கள் வெற்றிபெறுவது கடினம் எனவும் கூறினர்.
தங்களது கோரிக்கையை வலியுறுத்தி அமைச்சர் நமச்சிவாயத்திடம் மனுவும் அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட அமைச்சர் நமச்சிவாயம் இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.