வங்கிகளுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்துவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார்.
ரெப்போ வட்டி விகிதம் என்பது பொருளாதாரத்திற்கான பல நிதி இலக்குகளை அடைய, நாட்டின் மத்திய வங்கியால் அங்கீகரிக்கப்பட்ட வணிக வங்கிகளுக்கு, கடன் வழங்கும் வட்டி விகிதமாகும். இந்நிலையில், இந்த ரெப்போ வட்டி விகிதமானது உயர்ந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் தெரிவித்துள்ளதாவது:
ரெப்போ வட்டி விகிதத்தை 0.5 சதவீதம் உயர்த்தப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து, வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம், 4.9 சதவீதத்திலிருந்து 5.4 சதவீதமாக உயர்த்தப்பட உள்ளது. இது உடனடியாக அமலுக்கு வரும்.
மேலும், 2022-23-ம் நிதியாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 7.2% ஆக தொடர்ந்து நீடிக்கும், 2023-24-ம் ஆண்டு முதல் காலாண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்தி 6.7% ஆக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு, ஆளுநர் சக்திகாந்த தாஸ் கூறியுள்ளார்.
நாட்டில் பணவீக்கம் விகிதம் அதிகரித்து வருவதை அடுத்து, அதை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக ரிசர்வ் வங்கி, இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாக கருதப்படுகிறது.
மேலும், வங்கிகளின் குறுகிய கால கடன் வட்டி விகிதம் உயர்வை அடுத்து வீடு, வாகனம், தனிநபர் கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
‘பிரதமர் மோடியைக் கண்டு நாங்கள் பயப்பட மாட்டோம்’ – ராகுல் காந்தி பேச்சு