ராமஜெயம் கொலை வழக்கில் முதற்கட்டமாக 4 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை நடைபெற்று வருகிறது.
தமிழக நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம். தொழிலதிபரான இவர் கடந்த 2012 ஆம் ஆண்டு மார்ச் 29 தேதி நடைபயிற்சி சென்றபோது, கடத்தி செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டார். அவரின் உடல் திருச்சி-கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது.
தமிழகத்தையே மிகவும் பரபரப்பாக்கிய இந்த கொலை சம்பவம் குறித்து முதலில் திருச்சி காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். இதன்பிறகு, வழக்கில் எந்த முன்னேற்றமும் இல்லாததால், பல தனிப்படைகளும் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தற்போது சிறப்பு புலனாய்வு குழு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறது.
முன்னதாக உண்மை சோதனை நடத்துவதற்காக தமிழகத்தின் பிரபல ரவுடிகள் 13 பேருக்கு திருச்சி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டுமென்று சம்மன் அனுப்பட்டது. மேலும் அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த வேண்டும் என்று சிறப்பு புலனாய்வு குழுவினர் திருச்சி நீதிமன்றத்தில் அனுமதி கோரியிருந்தனர்.
இந்நிலையில், 13 பேரிடம் உண்மையைக் கணடறியும் சோதனைக்கு அனுமதி அளித்திருந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையதாக சொல்லப்படும் மோகன்ராம், நரைமுடி கணேசன், சத்யராஜ், தினேஷ்குமார் ஆகிய 4 பேரிடம் உண்மைக் கண்டறியும் சோதனை சென்னை மயிலாப்பூரில் உள்ள தடயவியல் கூடத்தில் நடைபெறுகிறது.
இந்த சோதனையின் முடிவுகளில் நிச்சயம் குற்றவாளி குறித்த அறிவியல் ரீதியான தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாரிசு மற்றும் துணிவு திரைப்படங்களின் வசூல் நிலவரம் என்ன?