கோதாவரி-கிருஷ்ணா, பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பானவை 2022- 23 ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டது. இத்திட்டம் குறித்தான அறிவிப்பு வெளிவந்தபோதே பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும், தலைவருமான டாக்டர் இராமதாஸ் அவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அந்த அறிக்கையில் முக்கிய அம்சமாக தெரிவிக்கப்பட்டது யாதெனில், தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறையிடத்திலும் இத்திட்டம் குறித்து கருத்தொற்றுமை ஏற்படுத்த கலந்தாய்வு நடத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், இன்று கோதாவரி-கிருஷ்ணா, பெண்ணாறு- காவிரி இணைப்பு திட்டம் தொடர்பாக தமிழகம், கேரளா, கர்நாடகம், ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தவிருக்கிறது.
இந்நிகழ்வு குறித்து டாக்டர் இராமதாஸ் அவர்கள், 5 தென்மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுடன் மத்திய நீர்வளத்துறை அமைச்சகம் அவசர ஆலோசனை நடத்தவிருப்பதை வரவேற்கிறேன் என்றும், கடந்த 4-ஆம் தேதி அறிக்கை வெளியிட்டிருந்த சூழலில் 5 மாநில ஆலோசனை நடப்பது மகிழ்ச்சியளிக்கிறது எனவும் தெரிவித்திருந்தார்.
மேலும், கோதாவரி – காவிரி இணைப்புத் திட்டத்தை விரைந்து செயல்படுத்த, இதில் சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களையும் ஒருங்கிணைக்க சிறப்புப் பணிக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்; திட்டத்தை நிறைவேற்ற இலக்கு நிர்ணயிக்க வேண்டும் என நாளையக் கூட்டத்தில் தமிழகம் வலியுறுத்த வேண்டும் எனவும் டாக்டர் இராமதாஸ் அவர்கள் பதிவிட்டுள்ளார்.