அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யும் என சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே வறண்ட வானிலை மட்டுமே இருந்து வருகிறது. இந்நிலையில், வறண்ட வானிலைக்கு விடுமுறை அளித்து அடுத்த நான்கு நாட்களுக்கு தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்யுமாம்!
நாளை, தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய இலேசானது முதல் மிதமான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை மறுநாள், அதாவது 11-02-2022 அன்று தென் தமிழக மாவட்டங்கள், புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கோயம்புத்துர், நீலகிரி, திருப்பூர் மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் இலேசான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 12, 13 ஆகிய தேதிகளிலும் மழை நீடிக்கும் என அறிப்பட்டுள்ளது.
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையை ஒட்டி இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.