நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்படுவார் என காங்கிரஸ் மூத்த தலைவர் கமல்நாத் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் மத்திய பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வருமான கமல்நாத் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர், ‘வருகிற 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சியின் பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியே தேர்ந்தெடுக்கப்படுவார்’ என தெரிவித்தார்.
மேலும், உலகில் எந்த ஒரு அரசியல் தலைவரும் இப்படி நீண்ட தூர பாத யாத்திரையை மேற்கொள்ளவில்லை என்றும், காந்தி குடும்பத்தை தவிர வேறு எந்த ஒரு குடும்பமும் இவ்வளவு பெரிய தியாகங்களை நாட்டுக்காக செய்ததில்லை என்றும் கமல்நாத் கூறினார். அதேபோல் ராகுல் காந்தி அதிகார அரசியல் செய்யவில்லை என்று கூறிய அவர், மாறாக மக்களுக்காக அரசியல் செய்வதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய கமல்நாத், தேர்தலில் வெற்றி பெறுவது நிச்சயம் என்றும், மத்திய பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைந்த பின்னர் பழைய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு கொண்டுவரப்படும் எனவும், மேலும் தேர்தலை முன்னிட்டு மாநில காங்கிரஸ் நிர்வாகத்தில் சில மாற்றங்கள் கொண்டுவரப்படும் என்றும் தெரிவித்தார்.
அடுத்த ஆண்டு மத்திய பிரதேசத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
‘ரிஷப் பந்த் நலம் பெற பிராத்திக்கிறேன்’ – பிரதமர் மோடி ட்விட்..