காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை தொடங்க திட்டமிட்டுள்ளார்.
கடந்த 2019-ஆம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியின் பெயரை சர்ச்சையாக பேசியது தொடர்பான வழக்கில் ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் தீர்ப்பு அளித்தது.
இந்தத் தீர்ப்பால், நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ராகுல் காந்தி நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதனால் சர்ச்சை அதிகரித்துள்ள நிலையில், ராகுல் காந்திக்கு சூரத் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது.
இதனிடையே, கர்நாடக சட்டமன்றத் தேர்தல் மே மாதம் 10 ஆம் தேதி நடைபெறும் என்றும் வாக்கு எண்ணிக்கை மே 13 ஆம் தேதி நடைபெறும் என்றும் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன.
இதன் காரணமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரான ராகுல் காந்தி வருகிற 9 ஆம் தேதி முதல் கர்நாடகாவின் கோலார் மாவட்டத்தில் இருந்து ஜெய் பாரத் என்ற பெயரில் யாத்திரை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளார்.
ராகுல் காந்தி சமீபத்தில் இந்திய ஒற்றுமை யாத்திரை என்ற பெயரில் நாடு முழுவதும் நடைபயணம் மேற்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சென்ட்ரல் மெட்ரோவில் தாய்மார்களுக்காக புதிய முயற்சி..