உக்ரைன் மீதான ரஷ்யாவின் தாக்குதல் தீவிரமடைந்து வரும் நிலையில், டொண்ட்ஸ்க் மாகாணத்தில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது.
உக்ரைன் மீது ரஷ்யா 134வது நாளாக போர்தொடுத்து வருகிறது. இந்த போரில் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் உள்பட பல ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
கடந்த திங்கள் கிழமை (ஜூலை 04) உக்ரைனின் கிழக்கு மாகாணமான லுஹான்ஸை முழுவதுமாகக் கைப்பற்றியதாக ரஷ்யா அறிவித்தது. இதனையடுத்து லுஹான்ஸ் மாகாணத்துக்கு அருகில் உள்ள டொனேட்ஸ்க் மாகாணத்தை ரஷ்யா கைப்பற்றலாம் என எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எனவே, டொண்ட்ஸ்க் பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பான இடத்துக்கு வெளியேற அம்மாகாண ஆளுநர் உத்தரவிட்டுள்ளார். தொடர்ந்து தாக்குதல் தீவிரமடைந்து வருவதால் பொதுமக்களின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் எனக் கருதி இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
டொனேட்ஸ்க் மாகாணத்தைக் கைப்பற்றுவதற்காக ரஷ்ய வீரர்கள் கடுமையான தாக்குதல் மேற்கொண்டு வருவதாக லுஹான்ஸ் மாகாணத்தின் ஆளுநர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், உக்ரைன் அதிபர் விளாடிமிர் செலென்ஸ்கி, உக்ரைன் முழுவதும் வான்வழி தாக்குதல் நடைபெறுவதற்கான ஆபத்து உள்ளதாக செவ்வாய்க்கிழமை இரவு (ஜூலை 05) தெரிவித்துள்ளார். மேலும், வான்வழி தாக்குதலைத் தடுக்க சிறந்த, நவீன பாதுகாப்பு படைப்பிரிவுகளுக்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனிடையே கடந்த வாரம் வெளியான ஆவணப்படம் ஒன்றில் (A President, Europe and War) பிரான்ஸ் அதிபர் மேக்ரான், ரஷ்யா அதிபர் விளாடிமிர் புதினுடன் பேசிக்கொள்வது போன்ற உரையாடல்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
உக்ரைனுடனான போருக்கு முன்பும், பின்பும் ரஷ்யா அதிபருடன், பிரான்ஸ் அதிபர் பேசிக்கொள்ளும் அனைத்து காணொளிகளும் இந்த ஆவணப்படத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆவணப்படம் குறித்து பிரான்ஸ் அதிபர் மேக்ரானை, ரஷ்ய நிதியமைச்சர் செர்கெய் லாவ்ரோவ் கடுமையாக சாடியுள்ளார். இரு தலைவர்களுக்கிடையே உள்ள நல்லுறவை சிதைக்கும் விதத்தில் இந்த காணொளிக்காட்சிகள் அமைந்துள்ளதாக கூறியுள்ளார்.
இந்த ஆவணப்படத்தின் ஆரம்பத்திலேயே பிப்ரவரி 20ம் தேதி விளாடிமிர் புதினுடன், பிரான்ஸ் அதிபர் பேசும் காட்சிகள் இடம்பெற்றுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்தது குறிப்பிடத்தக்கது.
போருக்கு பேச்சுவார்த்தையே தீர்வு- பிரதமர் கருத்து