நடப்பு கல்வியாண்டுக்கான 10, 11, 12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணையை தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இன்று வெளியிட்டார்.
தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் பன்னிரெண்டாம் வகுப்பு படித்து வரும் மாணவர்களுக்கு மார்ச் 13-ஆம் தேதி பொதுத் தேர்வு தொடங்கி, ஏப்ரல் 3-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இத்தகவலை, சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். நடப்பாண்டில், தமிழகம் முழுவதும் 12-ஆம் வகுப்புத் தேர்வை சுமார் 8.8 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
மேலும், தமிழகத்தில் தற்போது 11-ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 14-ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. இந்தத் தேர்வை சுமார் 8.50 லட்சம் பேர் எழுதுகிறார்கள்.
அதேபோல, தமிழகத்தில் நடப்பு கல்வியாண்டில் 10-ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வு ஏப்ரல் 6-ஆம் தேதி தொடங்கி 20-ஆம் தேதி வரை நடைபெறவிருக்கிறது. 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 10 லட்சம் பேர் எழுதுகிறார்கள். இதைத்தொடர்ந்து, பொதுத்தேர்வு முடிவுகள் மே மாதம் இறுதியில் அல்லது ஜூன் முதல் வாரத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: டீ, காபி பிரியர்களுக்கு ஒரு ஷாக்கிங் நியூஸ்; ஆவின் பால் விலை உயர்வால் அடுத்த அவஸ்தை