Sunday, March 17, 2024
மேலும்
    Homeசெய்திகள்தமிழ்நாடு'நான் மீண்டு வருவேன்' - உயிரழந்த கால்பந்து வீராங்கனையின் கடைசி ஸ்டேட்டஸ்...

    ‘நான் மீண்டு வருவேன்’ – உயிரழந்த கால்பந்து வீராங்கனையின் கடைசி ஸ்டேட்டஸ்…

    தவறான சிகிச்சையால் உயிரிழந்ததாக கூறப்படும் பிரியாவின் கடைசி வாட்சப் ஸ்டேட்டஸ் இணையதளத்தில் வைரலாகி வருகிறது. 

    சென்னையில் உள்ள வியாசர்பாடியை சேர்ந்தவர் ரவிக்குமார். இவரது மகள் பிரியா. 17 வயதான பிரியா கால்பந்து விளையாட்டில் அதிக ஆர்வமுடையவராக விளங்கி வந்தார். இதனால், கால்பந்து போட்டியில், மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றார். சென்னை ராணிமேரி கல்லூரியில் படித்து வந்த பிரியாவுக்கு கால்பந்து பயிற்சியின்போது காலில் தசைப்பிடிப்பு எற்பட்டது. 

    இதைத்தொடர்ந்து, பிரியாவை கொளத்தூர், பெரியார் நகர் அரசு மருத்துவமனைக்கு பெற்றோர்கள் அழைத்துச் சென்றனர். அங்கு, பிரியாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது வலது கால் மூட்டுப்பகுதியில் ஜவ்வு விலகி உள்ளதாகக் கூறி அறுவை சிகிச்சை செய்தனர். 

    ஆனால், பிரியாவுக்கு அதன் பின்னர் காலில் வீக்கம் ஏற்பட்டு உணர்விழப்பு ஏற்பட்டது. இதனால், சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக பிரியா அனுப்பப்பட்டார். அங்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் பிரியாவின் வலது காலில் ரத்தம் உறைந்து தொற்று ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. உடல் முழுவதும் தொற்று பரவாமல் தடுக்க உடனடியாக அறுவை சிகிச்சை செய்து, காலை அகற்ற வேண்டுமென தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, வலது காலின் முழங்கால் பகுதிக்கு மேல் அகற்றப்பட்டது.

    இதனிடையே, பெரியார் நகர் அரசு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சை காரணமாகவே இளம்பெண்ணின் கால் அகற்றப்பட்டதாக அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் குற்றம் சாட்டினர். இதைத்தொடர்ந்து, இச்சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த அரசு உத்தரவிட்டது. 

    அதன்படி, ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், உடல்நிலை மோசமடைந்து, தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த பிரியா இன்று சிகிச்சை பலனின்றி மரணமடைந்தார். இதன் பின்னர் உடற்கூராய்விற்கு பிரியாவின் பிரேதம் உட்படுத்தப்பட்டது. 

    பிரியாவின் உடற்கூராய்வு முடிந்து, அவரது உடலை எடுத்துச்செல்ல வாகனத்தில் மாற்றப்பட்டபோது, அந்த வாகனத்தை மறித்து, பிரியாவின் உறவினர்களும், நண்பர்களும் உயிரிழப்புக்கு காரணமான மருத்துவர்களை கைது செய்யக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    இதையடுத்து, பிரியாவின் உறவினர்கள், நண்பர்களுடன் காவல்துறை மற்றும் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வர் டாக்டர் தேரணிராஜனும் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை சமரசம் செய்த நிலையில் பிரியாவின் உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    பின்னர், பிரியாவின் உடல் வியாசர்பாடியில் உள்ள அவரது வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு அவரது உறவினர்கள், நண்பர்கள் உள்ளிட்ட பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை அவரது உடலுக்கு இறுதிச் சடங்கு நடைபெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்நிலையில், கால்பந்து வீராங்கனையின் வாட்சப் ஸ்டேட்டஸ் ஒன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது. அந்த ஸ்டேட்டஸில், ‘என் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரே…. நான் விரைவில் மீண்டு வருவேன். ஆதலால் நீங்கள் யாரும் வருந்த வேண்டாம். மாஸான முறையில் நான் மீண்டு வருவேன். என் விளையாட்டு என்னை விட்டுப் போகாது. நான் மீண்டு வருவேன் என நம்பிக்கையாக இருங்கள்.. லவ் யூ’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    இந்த வைரல் ஸ்டேட்டஸ் தற்போது காண்போரை உணர்ச்சிப்பூர்வமாக்கி வருகிறது. 

    இதையும் படிங்க: கால்பந்து வீராங்கனை உயரிழப்புக்கு அரசியல் தலைவர்கள் கண்டனம்; ஒரு கோடி ரூபாய் வழங்கவும் வலியுறுத்தல்!

    இது போன்ற பல சுவாரஸ்யமான தகவல்களுக்கு நமது தினவாசல் Facebook Page யை "Like" செய்யுங்கள், "Follow" பண்ணுங்கள், “Share” பண்ணுங்கள்.
    - Advertisment -

    Must Read

    காற்றிலிருந்து குடி தண்ணீர்.. புதிய முறை!

    சுற்றுபுறத்தில் உள்ள ஈரப்பதமான காற்றிலிருந்து தண்ணீரை பிரித்தெடுக்க கூடிய கருவி குறித்து தகவல்கள் வெளிவந்துள்ளது.  தூய குடிநீருக்காக பல நாடுகள் உலக அரங்கில் தவித்து கொண்டிருக்கின்றன, சில நாடுகள் தேவைக்கு மீறி குடிநீரை செலவழிக்கின்றன....