நடிகை பிரியா பவானி சங்கர் தெலுங்கு திரையுலகில் கால் பதிக்கவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் வெளிவந்துள்ளது.
மேயாத மான் திரைப்படத்தின் மூலம் தமிழ் வெள்ளித்திரையுலகிற்கு நுழைந்தவர், பிரியா பவானி ஷங்கர். அதற்கு முன்பு செய்தி வாசிப்பாளராகவும், சின்னத்திரை நடிகராகவும் ரசிகர்களை கவர்ந்தவர், கதாநாயகியாக மேயாத மான் திரைப்படத்தில் பலரையும் ஈர்த்தார்.
இவரது நடிப்பில் சமீபத்தில் ஹாஸ்டல், யானை, குருதி ஆட்டம், திருச்சிற்றம்பலம் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. மேலும், இவர் ஜெயம் ரவியுடன் இணைந்துள்ள அகிலன், ராகவா லாரன்ஸுடன் இணைந்து நடித்துள்ள ருத்ரன், எஸ்.ஜே.சூர்யாவுடன் பொம்மை ஆகிய படங்கள் வெளியீட்டுக்கு தயாராகியுள்ளன. இதுமட்டுமல்லாது சிம்பு, கௌதம் கார்த்திக்குடன் இணைந்து பத்து தல, கமல்ஹாசனின் இந்தியன் 2 போன்ற படங்களிலும் பிரியா பவானி ஷங்கர் நடித்துவருகிறார்.
இந்நிலையில், தற்போது தெலுங்கு திரைப்பட உலகில் பிரியா பவானி சங்கர் கால்பதிக்க உள்ளார். பென்குயின் படத்தின் இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் சத்யதேவ் நடிக்கும் 26-வது படத்தில் பிரியா பவானி சங்கர் நடிக்க உள்ளார். பெயரிடப்படாத இப்படத்தில் இணைந்துள்ளதை படக்குழுவினர் அதிகாரபூர்வமாக போஸ்டர் வடிவில் அறிவித்துள்ளனர்.
அந்த போஸ்டரில் கத்திரிக்கோல், அளவீடு டேப் (measuring tape) போன்றவைகள் உள்ளதால் ஃபேஷன் டிசைனராக அவர் நடிப்பார் என்று எதர்ப்பார்க்கப்படுகிறது. இப்படத்திற்கு சரண் ராஜ் இசையமைக்க, மணிகண்டன் கிருஷ்ணமாச்சாரி ஒளிப்பதிவு செய்கிறார்.
இதையும் படிங்க : நடிகர் திலகம் சிவாஜி சொத்து விவகாரம்.. அதிரடியாக தீர்ப்பு சொன்ன நீதிமன்றம்