கர்நாடக மாநிலம் பெங்களூருவில் மருத்துவர்களின் அலட்சியத்தாழும் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததாழும் ஈன்ற தாயும் பிறந்த குழந்தைகளும் பலியான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச்சம்பவம் குறித்து கர்நாடக சுகாதாரத்துறை அமைச்சர் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு மூன்று பேர் அடங்கிய விசாரணை குழுவையம், கடந்த வெள்ளிக்கிழமையன்று மூன்று செவிலியர்களையும் மருத்துவர்களையும் பணியிடை நீக்கமும் செய்துள்ளார்.
இந்நிலையில் கர்நாடகாவில் ஆதார் இல்லாமல், பிரசவம் பார்க்க மறுப்பு தெரிவித்து, தமிழகத்தைச் சேர்ந்த பெண் இரட்டை குழந்தைகளுடன் உயிரிழந்த சம்பவத்தில், அனைத்து ஊழியர்களையும் கைது செய்ய வேண்டும் என பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து, தனது ட்விட்டர் பக்கத்தில் அண்ணாமலை வெளியிட்டுள்ள பதிவுகளில்,
தாய் அட்டை மற்றும் ஆதார் அட்டை இல்லாத காரணத்தினால் கர்நாடக மாநிலம் தும்மாகூரு அரசு மருத்துவமனையிலிருந்து திருப்பி அனுப்பப்பட்ட கர்ப்பிணிப் பெண்ணான சகோதரி கஸ்தூரி மற்றும் அவருக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகளும் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியும் மன வேதனையும் அளிக்கிறது.
இந்த மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட்ட அனைவரையும் கர்நாடக அரசு பணியிடை நீக்கம் செய்துள்ளது. மூன்று உயிர்கள் பலியாவதற்குக் காரணமானவர்களை பணியிடை நீக்கம் செய்தால் மட்டும் போதாது.
தமிழகத்தைச் சேர்ந்த சகோதரி கஸ்தூரி மற்றும் பிறந்த இரட்டை குழந்தைகளின் உயிரிழப்புக்கு காரணமான அனைவரையும் உடனடியாக கைது செய்து, தகுந்த தண்டனை வழங்கிட கர்நாடக அரசு வழிவகை செய்ய வேண்டும்.
இவ்வாறு, அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:இப்படி செய்வது நாட்டுக்கே ஆபத்து! பாஜகவின் ‘கரன்சி பாலிடிக்ஸ்’சை விமர்சித்த டி.ஆர்.பாலு