“அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில் வழங்கப்பட்டது.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியம் சார்பில் “அனைவருக்கும் வீடு” கட்டும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வினை முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தொடங்கி வைத்தார். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் அந்தந்த தொகுதி மக்கள் பிரதிநிதிகளால் வழங்கப்பட்டன.
கோவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தலைமையில்..
கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் 829 பயனாளிகளுக்கு பிரதம மந்திரி அவாஸ் யோஜனா திட்டத்தின் கீழ் தலா 2.10 லட்ச ரூபாய் மானியத்துடன் வீடுகள் ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டன. மேலும் 11 பயனாளிகளுக்கு அடுக்குமாடி குடியிருப்புக்கான ஒதுக்கீட்டு ஆணைகள் வழங்கப்பட்டது. இந்த நிகழ்வில் அமைச்சர் செந்தில் பாலாஜி, கோவை மக்களவை உறுப்பினர் பி.ஆர்.நடராஜன், கோவை மாவட்ட ஆட்சியர் ஜி.எஸ்.சமீரன், கோவை மாநகராட்சி ஆணையாளர் பிரதாப், கோவை மேயர் கல்பனா, துணை மேயர் வெற்றிச்செல்வன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
நலத்திட்ட உதவிகளை வழங்கிய பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கோவையில் மட்டும் ”அனைவருக்கும் வீடு” என்ற திட்டத்தின் கீழ் 18.45 கோடி ரூபாய் மதிப்பிலான ஒதுக்கீடுகளை முதல்வர் இன்று வழங்கியுள்ளார். எஞ்சிய பயனாளிகளுக்கு அடுத்து வரும் நாட்களில் நலத்திட்ட உதவிகள் கிடைக்கும். திமுக ஆட்சியின் ஓராண்டு நிறைவடைந்துள்ள நிலையில் கோவையில் 45 டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளன என தெரிவித்தார்.
இது ஜோக்கர் ரிட்டர்ன்ஸ்; மீண்டும் களத்தில் குதிக்கப்போகும் ஜோக்கர்!