திருச்சி சூரியூரில் நடைபெற்ற ஜல்லிகட்டுப் போட்டியில் காளை மோதியதில் பார்வையாளர் ஒருவர் உயிரிழந்தார்.
திருச்சி மாவட்டம், பெரிய சூரியூர் கிராமத்தில் பொங்கல் மற்றும் திருவிழாவை முன்னிட்டு ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த ஜல்லிக்கட்டு போட்டியில், திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், தஞ்சாவூர் உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 800 மாடுகள் கலந்துகொண்டன. மேலும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர்.
இந்தப் போட்டியை திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார் கொடி அசைத்து தொடங்கி வைக்க, காளைகள் சீறிப் பாய்ந்தன. மாடுபிடி வீரர்கள் காளைகளை அடக்க முற்பட்டு தமிழ் மண்ணின் வீரத்தை காட்டினர்.
இந்நிலையில், போட்டியைக் காண வந்த புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த அரவிந்த் என்ற இளைஞரை மாடு முட்டியது. இதில் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவருக்கு முதல் உதவி அளிக்கப்பட்ட நிலையில், மேல் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அப்போது, அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயரிழந்தார்.
திருச்சி ஜல்லிக்கட்டுப் போட்டியை காண வந்த நபருக்கு நேர்ந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. முன்னதாக பாலமேடு ஜல்லிகட்டில் 9 காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர் அரன்விந்த் ராஜன் என்பவர் மாடு முட்டி உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
பொங்கல் கொண்டாட்டம்: இறைச்சி கடைகளில் குவிந்த மக்கள்