குடிபோதையில் வாகனம் ஓட்டி பிடிபடுபவர்கள் 14 நாட்களுக்குள் அதற்கான அபராதத் தொகையை செலுத்த வேண்டும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
தமிழக அரசு கடந்த அக்டோபர் 20 ஆம் தேதி திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் குறித்த அரசாணையை வெளியிட்டது. இதில் பல்வேறு திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. இந்த புதிய திருத்தங்கள் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி முதல் நடைமுறைக்கு வந்தது. குறிப்பாக குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்களுக்கு 10,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என விதி மாற்றியமைக்கப்பட்டிருந்தது.
இருப்பினும், வாகன ஓட்டிகள் அபராத தொகையை செலுத்தாமல் வாகனத்தை இயக்கி வருகின்றனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, அபராதத் தொகையை செலுத்துமாறு நீதிமன்றத்தின் வாயிலாக வாரண்ட் பெற்று அந்தந்த வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து காவல்துறையினர் அனுப்பி வைக்கின்றனர்.
இதன்படி, வாரண்ட் வழங்கப்பட்டு 14 நாள்களுக்குள் அபராதத் தொகையை செலுத்தாமல் இருந்தால், அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும் என போக்குவரத்து காவல்துறை கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையும் படிங்க: உக்ரைனிலிருந்து 1.40 கோடி மக்கள் இடம்பெயர்வு; ஐ.நா. அதிர்ச்சி தகவல்