தமிழகத்தில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. தமிழகத்தில் எப்போதும் போல ஆளுங்கட்சியே வெற்றி பெற்றது. இருப்பினும் பல கட்சிகள் தங்களின் வாக்கு வங்கியை இத்தேர்தலில் நிறுபித்துள்ளது.
பாட்டாளி மக்கள் கட்சியும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் தனது வாக்கு வங்கியையும் தமிழகத்தின் நிலைமையும் வெற்றியின் மூலம் நிறுபித்துள்ளது. இந்நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் இராமதாஸ் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிவிப்பில், தமிழ்நாட்டில் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல்களில் பாட்டாளி மக்கள் கட்சி கவுரவமான வெற்றியை பெற்றிருக்கிறது. பேரூராட்சிகளில் 73 இடங்களிலும், நகராட்சிகளில் 48 இடங்களிலும் மாநகராட்சிகளில் 5 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளதை குறிப்பிட்டார், இராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர்களுக்கும், வாய்ப்பை இழந்தவர்களுக்கும், வெற்றிக்காக கடுமையாக உழைத்தவர்களுக்கும், வாக்களித்த வாக்காளர்களுக்கும் டாக்டர் இராமதாஸ் வாழ்த்துகள் தெரிவித்ததார்.
“உள்ளாட்சிகள் தான் மக்களுக்கு நெருக்கமானவை; உள்ளாட்சிகள் தான் மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றித் தருபவை ஆகும். உள்ளாட்சிகளில் நல்லாட்சி நடந்தால் தான் தமிழ்நாடும், இந்தியாவும் முன்னேறும் என்பதாலும், ஜனநாயகம் தழைக்கும் என்பதாலும் பாட்டாளி மக்கள் கட்சி நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நகர்ப்புற வளர்ச்சிக்கான செயல்திட்டங்களை முன்வைத்து போட்டியிட்டது. மாநிலத்தின் வளர்ச்சிக்காகவும், மக்களின் முன்னேற்றத்திற்காகவும் பல்வேறு திட்டங்களை முன்வைத்த பாட்டாளி மக்கள் கட்சிக்கு கிடைந்துள்ள இந்த வெற்றி கவுரவமானது; ஆனால், போதுமானது அல்ல” என டாக்டர் இராமதாஸ் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பண பலமும், அதிகார பலமும் கட்டவிழ்த்து விடப்பட்டதையும், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்டதிலிருந்தே அதிகார சுனாமி சுழன்றடிக்கத் தொடங்கி விட்டது எனவும் மக்களின் மனங்களை வென்றெடுக்க வேண்டிய இந்தத் தேர்தலில் பணம் மூலம் தான் வாக்குகள் வாங்கப்பட்டன எனவும் இராமதாஸ் அவர்கள் தெரிவித்தார்.
மேலும், “ஆளும் கட்சியும், ஆண்ட கட்சியும் பணத்தை மூலதனமாக வைத்து தான் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தன. தமிழ்நாடு முழுவதும் நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை பணம் படைத்தவர்களுக்கும், பணம் இல்லாதவர்களுக்கும் இடையே நடந்த ஒன்றாகத் தான் கருத வேண்டியுள்ளது. உள்ளாட்சித் தேர்தல்களின் முடிவை விடவும் ஜனநாயகத்திற்கு பணநாயகத்தால் ஏற்பட்டிருக்கும் அச்சுறுத்தலும், ஆபத்தும் தான் எதிர்காலம் என்னவாகுமோ என்ற கவலையை ஏற்படுத்தியிருக்கிறது” என்று தன் கவலையையும் வெளிப்படுத்தினார், டாக்டர் இராமதாஸ்.
பாட்டாளி மக்கள் கட்சியைப் பொறுத்த வரை வெற்றி – தோல்விகள் தற்காலிகம். மக்கள் பணி தான் நிரந்தரம் என்றவர், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வெற்றி பெற்றவர்களும், வெற்றியை பெற முடியாமல் போனவர்களும், நமக்கு வாக்களித்த மக்களின் நம்பிக்கையை தக்க வைத்துக் கொள்வதற்காகவும், வாக்களிக்காத மக்களின் நம்பிக்கையை வென்றெடுப்பதற்காகவும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதற்காக வழக்கம் போல கடுமையாக உழைக்க வேண்டும் எனவும் இராமதாஸ் தெரிவித்துள்ளார்.