கடந்த 2019 ஆம் ஆண்டு ஜூன் 23 ஆம் தேதி நடிகர் சங்க தேர்தல் நடத்தப்பட்டது. பல எதிர்பார்ப்புகளுக்கு இடையே, இடையூறுகளுக்கு இடையே இந்த நடிகர் சங்க தேர்தலானது நடைபெற்றது. இந்தத் தேர்தலில் பதிவான வாக்குகள், சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள சவுத் இந்தியன் வங்கி கிளை பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்ய கோரி நடிகர் ஏழுமலை மற்றும் பெஞ்சமின் ஆகியோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். பெரும் பேசு பொருளாய் மாறிய இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரனைக்கு வந்தது.
இவர்கள் தொடர்ந்த வழக்கு மட்டும் இன்றி அனைத்து வழக்குகளையும் ஒன்றாக விசாரித்த தனி நீதிபதி தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். மீண்டும் தேர்தல் நடத்தப்படும் வரை சங்க நிர்வாகத்தை அரசு நியமித்த தனி அதிகாரி தொடர்ந்து கவனிக்கவும் உத்தரவிடப்பட்டது.
ஆனால், இந்த உத்தரவை எதிர்த்து நடிகர்கள் விஷால், நாசர், கார்த்தி தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீடு வழக்குகள் அனைத்தும் விசாரிக்கப்பட்டு முடிவடைந்த நிலையில், இன்று காலை இந்த வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இத்தீர்ப்பின்படி, நடிகர் சங்க தேர்தல் செல்லாது என அறிவித்திருந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவான ஓட்டுகளை நான்கு வாரத்திற்குள் எண்ணி முடிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.