தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் கடந்த பத்தொன்பதாம் தேதி நடைபெற்றது. இந்நிலையில், இன்று வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. ஏற்கனவே பலரும் கணித்தபடி தமிழகத்தின் ஆளுங்கட்சியான திராவிட முன்னேற்ற கழகம்தான் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்து வருகிறது. 21 மாநாகராட்சிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது.
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் திமுகவின் வெற்றி உறுதியாகியுள்ள நிலையில் அண்ணா அறிவாலயத்தில் திமுக தொண்டர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக வெற்றிப்பெற்றதை அறிந்து, பிற கட்சியினர் பலரும் தற்போது திமுகவில் இணைந்து வரும் தகவல்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன. மேலும், நடைபெற்ற நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற சுயேட்சை வேட்பாளர்கள் திமுகவில் இணைவார்கற் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது. எதிர்பார்த்ததைப் போலவே கிருஷ்ணகிரியில் சுயேட்சையாக வெற்றிப்பெற்ற மூன்று வேட்பாளர்கள் திமுகவில் இணைந்தனர்.
அதேசமயம் சற்றும் எதிர்பாரா வண்ணம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றிப்பெற்ற பிற கட்சியின் வேட்பாளர்கள் திமுகவில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக அதிமுக வேட்பாளர்கள். இந்நிகழ்வு தற்சமயத்தில் மிகவும் பரபரப்பாய் பேசப்பட்டு வருகிறது.
மதுரை மாவட்டம் மேலூர் நகராட்சி 9வது வார்டில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற அருண் சுந்தர பிரபு, அமைச்சர் மூர்த்தி முன்னிலையில் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டார். இதேபோல், ஆவடி மாநகராட்சி 14வது வார்டில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற வேட்பாளர் ராஜேஷ் திமுக ஆவடி சட்டமன்ற உறுப்பினரும் தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசரை நேரில் சந்தித்து தன்னை திமுகவில் இணைத்து கொண்டுள்ளார்.
அதிமுகவின் வெற்றி வேட்பாளர்கள் வெற்றிப்பெற்ற உடனே திமுகவில் இணைந்தது அதிமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிகிறது. இதனை அறிந்த நெட்டிசன்கள் ‘கட்சி தாவல் இங்கே தர்மமடா’ என்று சமூகவலைத்தளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.