ஜனநாயகத்தின் அனைத்து அதிகாரங்களும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் முடக்கப்படுவதால், அதிபர் ஆட்சி முறையை நோக்கி நாடு செல்வதாக மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
கொல்கத்தாவில் அமைந்துள்ள தேசிய நிதியியல் அறிவியல் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழா நேற்று (அக்டோபர் 31) நடைபெற்றது. இந்த விழாவில் தலைமை நீதிபதி யு.யு.லலித், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோர் கலந்துகொண்டனர்.
அப்போது இந்த விழாவில் பேசிய மம்தா பானர்ஜி தெரிவித்ததாவது:
நாட்டில் உள்ள ஜனநாயக அமைப்புகள் அனைத்தின் அதிகாரங்களும், ஒரு குறிப்பிட்ட பிரிவினரால் ஆதிக்கம் செலுத்தப்படுகிறது.
இந்தநிலை தொடர்ந்து நீடித்தால், நாட்டில் அதிபர் ஆட்சி முறை ஏற்படுவதற்கான அபாயம் ஏற்படும். அதை நோக்கிதான் நாடு சென்று கொண்டிருக்கிறது. ஒன்றிய கூட்டாட்சி கட்டமைப்பு, ஜனநாயகத்தை பாதுகாப்பதை தலைமை நீதிபதி உறுதிசெய்ய வேண்டும்.
பதவிக்கு வந்த 2 மாதங்களில் நீதித்துறை என்றால், என்ன என்று காட்டியுள்ளீர்கள். நீதிமன்றத்தின் மேல் மக்கள் நம்பிக்கை இழந்து விட்டார்கள் என்று சொல்லவில்லை. இருப்பினும், இப்போதைய நிலையில் மிக மோசமாக உள்ளது. மக்களின் அழுகுரலைக் கேட்டு, அவர்களை நீதிமன்றங்கள் அநீதியில் இருந்து காப்பாற்ற வேண்டும்.
இவ்வாறு, அவர் பேசினார்.
இதையும் படிங்க: 50 முதல் 100 மீட்டர் வரை தாக்குதல் நடத்த திட்டமிட்ட முபின்: வீடியோ ஆதாரங்களுடன் வெளிவந்த திடுக்கிடும் தகவல்கள்