அருந்ததியர்களை அவதூறாக பேசியதாக சீமான் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 27 ஆம் தேதி நடைபெற உள்ளது. இங்கு போட்டியிடும் அரசியல் கட்சிகள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானை வன்கொடுமை தடுப்பு சட்டத்தில் கைது செய்ய தலித் அமைப்பினர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளித்துள்ளனர்.
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், அருந்ததியர் சமூகத்தை அவதூறாக பேசியதாகவும், பூர்வகுடி தமிழர்களாக வாழ்ந்து வரும் அருந்ததியர் இன மக்களை இழிவுப்படுத்தும் வகையில் அவரது பேச்சு இருப்பதாகவும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் பிரச்சாரத்தில் விதிமுறைகளை மீறி குறிப்பிட்ட சமூகத்தை இழிவுபடுத்தி பேசிய சீமான் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட அவருக்கு தடை விதிக்க வேண்டும். தேர்தலில் இருந்து நாம் தமிழர் கட்சி வேட்பாளரை தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என தலித் அமைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். மேலும் சீமான் மீது எஸ்சி, எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
சீமான் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால் அடுத்த பிரச்சாரத்திற்கு வரும்போது அவரை முற்றுகையிட்டு போராட்ட நடத்தப்போவதாக தெரிவித்த தலித் அமைப்பினர், தேர்தல் நடத்தும் அலுவலரை சந்தித்தும் புகார் அளித்தனர்.
இதனிடையே இன்று சீமானை கண்டித்து ஈரோட்டில் அருந்ததிய மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
நடிகர் சிலம்பரசனின் பத்து தல இசை வெளியீட்டு விழா குறித்த அறிவிப்பு!