திமுக நாடாளுமன்ற உறுப்பினரின் நாக்கை அறுத்து கொண்டு வந்தால் ஒரு கோடி ரூபாய் பரிசு வழங்கப்படும் என்று சமூக வலைதளத்தில் பதிவிட்ட இந்து அமைப்பை சேர்ந்த நிர்வாகியை காவல்துறையினர் கைது செய்தனர்.
மதுரை மாவட்டம் உசிலம்பட்டியைச் சேர்ந்த இந்து மக்கள் புரட்சி கட்சியின் மாநில அமைப்பாளர் கண்ணன் என்ற நபர் தனது முகநூல் பக்கத்தில் சர்ச்சைக்குரிய வகையில் பதிவு ஒன்றை வெளியிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.
அந்த பதிவில், ‘இந்திய திருநாட்டில் செய்த சத்திய பிரமாணத்தை மறந்து அந்நிய நாட்டின் கைக்கூலி போல் செயல்படும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை வன்மையாக கண்டிக்கிறோம். இந்துக்களை விபச்சாரிகள் என்று கூறிவரும் ஆ.ராசாவின் நாக்கை அறுத்துக் கொண்டு வரும் காவி ஆண் மகனுக்கு, ரூபாய் ஒரு கோடியும், ஒரு ஏக்கர் நிலமும் பரிசாக வழங்கப்படும்’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது
இந்த பதிவு சமூக வலைத்தளங்களில், அதிகம் பகிரப்பட்டதை அடுத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதன் காரணமாக மதுரை உத்தப்பநாயக்கனூர் காவல்துறையினர் அந்த நபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையும் படிங்க: ‘நான் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும்’ – ஆ.ராசா ஆவேசம்