மெரினாவில் மாற்றுத்திறனாளிகளுக்காக அமைக்கப்பட்டுள்ள பாதையில் அவர்களைத் தவிர மற்றவர்கள் பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டுமென மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.
சென்னை மெரினா கடற்கரையில் மாற்றுத்திறனாளிகளுக்கு என பிரத்யேக பாதை கடந்த ஞாயிற்றுக் கிழமை திறந்துவைக்கப்பட்டது. தமிழக அரசின் இந்த முன்னெடுப்புக்கு பல்வேறு தரப்பிலிருந்தும் பாராட்டுகள் குவிந்தன.
இந்நிலையில், மக்கள் நீதி மய்யம் இந்த பாதை குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;
மாற்றுத்திறனாளிகளுக்கு ஒரு தூரத்து கனவாகயிருந்தவொன்று, அலைகள் வந்து மோதிச்செல்லும் சென்னை கடற்கரையை அருகில் சென்று பார்ப்பது. சாலைக்கும், கடற்கரைக்கும் இடைப்பட்ட மணற்பரப்பு மிக நீளமாக இருந்ததால், மாற்றுத்திறனாளிகள் கடல் அருகில் சென்று கண்டு மகிழ முடியாமல் தூரத்திலிருந்து ஏக்கத்தோடு பார்த்து செல்லும் காட்சிகளை பலகாலமாக மெரினா கடற்கரையில் நாம் அடிக்கடி கண்டிருக்கிறோம்.
அதற்கொரு விடிவை, மாற்றுத்திறனாளிகளும் கடலின் அருகில் வந்து கண் நனைய கடலைப்பார்த்துச்செல்லும் வாய்ப்பை இப்போது பெற்றுள்ளனர். சாலையிலிருந்து கடல்வரை அவர்கள் செல்ல பாதை அமைத்துக்கொடுத்த தமிழக அரசிற்கு, நல்லதை யார் செய்தாலும் பாராட்டும் மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பாகவும், தலைவர் நம்மவர் கமல்ஹாசன் அவர்கள் சார்பாகவும் நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.
அதே நேரத்தில் அந்தப் பாதையை மாற்றுத்திறனாளிகளும், அவர்களுக்கு உதவியாக வருபவர்கள் மட்டுமே பயன்படுத்தவும், மற்றவர்கள் செல்வதை தடுக்கவும் அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரு சிறந்த நோக்கத்தோடு போடப்பட்ட அந்தப்பாதை பழுதடைந்து விடாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
மாற்றுத்திறனாளிகளுக்கு எப்போதும் அப்பாதை பயன்பாட்டில் இருக்க, அதை பாதுகாக்கும் பொறுப்பு நமக்கு இருக்கிறது என்பதை பொதுமக்களும் உணர்ந்து அதை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு மக்கள் நீதி மய்யம் கேட்டுக்கொள்கிறது என்று அக்கட்சியின் ஊடகம் மற்றும் செய்தித்தொடர்பின் மாநில செயலாளர் முரளி அப்பாஸ் தான் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
தமிழில் கலக்கும் ‘ரஞ்சிதமே’ பாடல்; தெலுங்கில் எப்போது ரிலீஸ் தெரியுமா?