கள்ளக்குறிச்சி மாணவி ஶ்ரீமதி உயிரிழந்த விவகாரம் தொடர்பாக மாணவி பயின்ற பள்ளியின் தாளாளர் உள்பட 5 பேரையும் சிபிசிஐடி காவலில் விசாரிக்க விழுப்புரம் நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பயின்று வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், பள்ளித்தரப்பில், மாணவி ஸ்ரீமதி தற்கொலை செய்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் தாயார், தன் மகள் தற்கொலை செய்துகொள்ளவில்லை. கொலைசெய்யப்பட்டிருக்கலாம் என்று காணொளி ஒன்றில் தெரிவித்தார். இதுகுறித்து காவல்நிலையத்தில் ஸ்ரீமதியின் பெற்றோர் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இதைத் தொடர்ந்து, மாணவி பயின்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தாளாளர், செயலாளர், மற்றும் முதல்வர் ஆகியோர் காவல்துறையால் கடந்த ஜூலை 17-ம் தேதி கைது செய்யப்பட்டனர். அதனை தொடர்ந்து, கடந்த ஜூலை 18-ம் தேதி இந்த வழக்கு தொடர்பாக அந்த பள்ளியில் பணிபுரிந்த இரண்டு ஆசிரியைகளையும் காவல்துறையினர் கைதுசெய்தனர்.
இந்த சம்பவம் தொடர்பாக கைதுசெய்யப்பட்ட 5 பேருக்கும் ஆகஸ்ட் 1-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இவர்கள் 5 பேரும் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில், கைது செய்யப்பட்ட 5 பேரையும் 3 நாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி விழுப்புரம் நீதிமன்றத்தில் கடந்த ஜூலை 26-ம் தேதி சிபிசிஐடி அதிகாரிகள் மனு தாக்கல் செய்தனர்.
இதற்கிடையே, இந்த மனு விழுப்புரம் தலைமை குற்றவியல் நீதிமன்ற நீதிபதி புஷ்பராணி அமர்வு முன் இன்று (ஜூலை 27) விசாரணைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து தாளாளர் உள்பட 5 பேருக்கும் ஒருநாள் சிபிசிஐடி காவலில் எடுத்து விசாரிக்க நீதிபதி புஷ்பராணி அமர்வு அனுமதி வழங்கியுள்ளது.
கள்ளக்குறிச்சி வன்முறை: பதில் தர மறுக்கும் டெலிகிராம்