கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான விசாரணையில் போதுமான ஒத்துழைப்பை டெலிகிராம் நிறுவனம் தரவில்லை என்று சிறப்பு புலனாய்வு குழு தகவல் தெரிவித்துள்ளது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே கனியாமூரில் உள்ள சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்த மாணவி ஶ்ரீமதி கடந்த ஜூலை 13-ம் தேதி பள்ளி விடுதி வளாகத்தில் மர்மமான முறையில் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக, சக்தி மெட்ரிக் பள்ளி அருகே மாணவியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போராட்டம் நடத்தி வந்த நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி நடைபெற்ற போராட்டம் வன்முறையாக மாறியது.
இந்நிலையில், கடந்த ஜூலை 17-ம் தேதி காலை மாணவி ஸ்ரீமதி உயிரிழந்ததற்கு நீதி கேட்டு மாணவர் அமைப்பினர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர். இப்போராட்டம் குறித்து தகவல் அறிந்த ஊர் பொதுமக்களும் போராட்டத்தில் கலந்துகொண்டனர். இதனால் போராட்டம் வலுத்தது.
இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம், போராட்டத்தை கைவிடுமாறு காவல்துறையினர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ஆனால் பேச்சுவார்த்தை பலனளிக்கவில்லை. மேலும், இந்த போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தடுப்பை மீறி பள்ளி வளாகத்துக்குள் நுழைந்தனர்.
பள்ளிக்குள் நுழைந்த மக்கள் திடீரென வன்முறையில் ஈடுபட்டனர். மேலும், காவல்துறையினர் மீது அவர்கள் கற்களை வீசியதாக கூறப்படுகிறது.
இதில் காவல்துறையினர் பலர் காயம் அடைந்தனர். மேலும், அங்கிருந்த வாகனங்களும் தீக்கிரையாக்கப்பட்டது. தொடர்ந்து பள்ளிக்குள் நுழைந்தவர்கள் அங்கிருந்த கணினிகள், நாற்காலிகள், ஆவணங்களுக்கு தீ வைத்தனர்.
மேலும், பள்ளியில் வன்முறை கட்டுக்கடங்காமல் செல்ல கூடுதலாக 500 அதிரடிப்படை வீரர்கள் வன்முறை நடைபெற்ற சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் குவிக்கப்பட்டனர். பெரும் போராட்டத்துக்குப் பிறகு வன்முறையாளர்களை விரட்டியடித்த அதிரடிப்படையினர், கடந்த ஜூலை 17ம் தேதி பிற்பகல் 3.30 மணியளவில் பள்ளி முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.
இந்நிலையில், கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பான விசாரணையில் டெலிகிராம் செயலி நிறுவனம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.
முன்னதாக, கள்ளக்குறிச்சி வன்முறை தொடர்பாக பதிவிட்டவர்களின் விவரங்களை தருமாறு, சிறப்பு புலனாய்வுக்குழு வாட்ஸ் அப், முகநூல், ட்விட்டர், டெலிகிராம் போன்ற நிறுவனங்களுக்கு கடிதம் அனுப்பியது.
கடந்த ஜூலை 17-ம் தேதி அன்று பள்ளி வளாகத்துக்கு வெளியில் போராட கூடியிருந்தவர்கள், புதியதாக தொடங்கப்பட்ட வாட்ஸ் ஆப் குழுவில் வந்திருந்த குறுஞ்செய்திகளின் அடிப்படையிலேயே திரண்டதாக காவல்துறை தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
கள்ளக்குறிச்சி வன்முறை: ட்விட்டருக்கு தமிழக காவல்துறை கடிதம்