தொழிற்பூங்கா அமைப்பதற்காக வேளாண் விளை நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.
கோவை மாவட்டத்தில் சுமார் 3700 ஏக்கர் பரப்பில் சிப்காட் தொழிற்பூங்கா அமைப்பதற்காக அன்னூர், மேட்டுப்பாளையம் ஒன்றியங்களில் உள்ள பள்ளிப்பாளையம், இலுப்பநத்தம், பொகளூர், குப்பனூர், அக்கரை செங்கம்பள்ளி, வடக்கலூர் ஆகிய 6 ஊராட்சிகளில் உள்ள விவசாய நிலங்களைக் கையகப்படுத்துவதாக கூறப்படுகிறது. இந்த முயற்சியை எதிர்த்து வேளாண் பெருமக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், இந்நிகழ்வு குறித்து மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணியின் மாநில செயலாளர் தெரிவிக்கையில், இந்தப் பகுதிகளில் ஆயிரக்கணக்கானோர் விவசாயத்திலும், ஆடு,கோழி வளர்ப்பு, பால் உற்பத்தி உள்ளிட்ட தொழில்களில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு தொழிற்பூங்கா அமைத்தால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, விவசாயிகள் வாழ்வாதாரத்தை இழந்து தவிப்பார்கள். மேலும், சுற்றுச்சூழல் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது என்று தெரிவித்தார்.
மேலும், விளை நிலங்களைக் கையகப்படுத்தி, தொழிற்பூங்கா அமைப்பது ஏற்கத்தக்கதல்ல. மாவட்டத்தின் வேறு பகுதிகளில் உள்ள தரிசு நிலங்களில் தொழிற்பூங்கா அமைக்கலாம். எனவே, விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, வேளாண் நிலங்களைக் கையகப்படுத்தும் முயற்சியைக் கைவிட வேண்டும் என மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துவதாக மக்கள் நீதி மய்யத்தின் விவசாய அணியின் மாநில செயலாளர் G.மயில்சாமி தெரிவித்துள்ளார்.
பெரம்பலூரில் முதல் தொழில் பூங்கா; திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்!