திருப்பூர் ரயில் நிலையத்தில் தமிழ்ப் பெயர்ப்பலகையை மறைத்துவிட்டு இந்தி மொழியில் பெயர் பலகை வைக்கப்பட்டிருப்பது பயணிகளிடையே குழப்பத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
திருப்பூர் ரயில் நிலையத்தில் சேவை மையம் ஒன்றில், தமிழ் மொழியில் சேவை மையம் என பெயர்ப்பலகை எழுதி வைக்கப்பட்டிருந்தது. இதேப்போன்று ஆங்கிலத்திலும், இந்தியிலும் அந்தப்பெயர் மொழி பெயர்க்கப்பட்டு ஒன்றின் கீழ் ஒன்றாக எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென இந்தியில் சகயோக் என்றும், ஆங்கிலத்தில் இன்பர்மேசன் சென்டர் என்பதற்கு பதிலாக ஆங்கில எழுத்தால் ‘சகயோக்’ என்றும், அதேபோல் தமிழில் சேவை மையம் என்பதற்கு பதிலாக தமிழ் எழுத்தால் சகயோக் என்றும் எழுதப்பட்டிருந்தது. இந்த வார்த்தையை எந்த மொழியைச் சேர்ந்தவர் படித்தாலும் ‘சகயோக்’ என்று தான் வாசிக்க முடியும்.
அதே சமயம், இந்தச் சேவை மையத்தின் அருகில் உள்ள ‘காசி சங்கமம்’ என்ற விளம்பர பதாகையிலும் இந்தியில் பெரிதாக எழுதப்பட்டு, தமிழில் சிறிதாக எழுதப்பட்டுள்ளது. இப்படி செய்வதற்கான அர்த்தம் என்ன? இந்தி திணிப்பா? அல்லது தமிழையே மறைக்க நினைக்கிறார்களா என கேள்விகளால் பொதுமக்கள் குழம்பி வருகின்றனர்.
இதனிடையே இந்தச் சம்பவத்திற்கு, பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தனது ட்விட்டர் பதிவில், “புதிய, புதிய வகைகளில் இந்தியை திணிக்க முயல்வதன் மூலம் தமிழ்நாட்டு மக்களின் உணர்வுகளுடன் தொடர்வண்டித்துறை விளையாடக் கூடாது. இந்தியைத் திணிக்கும் இத்தகைய அறிவிப்பு பலகைகள் திருப்பூர் உட்பட எங்கு இருந்தாலும் அவற்றை தொடர்வண்டித் துறை உடனடியாக அகற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு எதிரான மனுக்கள்; உச்சநீதிமன்றத்தில் விசாரணை