பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் முகமது ஹஸ்னைன் சர்வதேச போட்டிகளில் பந்துவீச ஐசிசி தடை விதித்தது. தனது பந்துவீச்சில் உள்ள சந்தேகங்களை நீக்க தவறியதால் முகமது ஹஸ்னைன் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
பாகிஸ்தானின் சிறந்த இளம் வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராகக் கருதப்படுபவர்தான், முகமது ஹஸ்னைன். கடந்த மாதம் ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக் பாஷ் லீக்கில் சிட்னி தண்டர் அணிக்காக விளையாடியபோது நடுவர்களால் முதன்முதலில் முகமது ஹஸ்னைன் பந்துவீச்சு முறை குறித்து புகாரளிக்கப்பட்டது. ஆனால் அச்சமயத்தில் அவர் பாகிஸ்தானுக்கு திரும்பியதால், லாகூரில் முகமது ஹஸ்னைனனின் பந்து வீச்சு பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
அப்போது, “சட்டவிரோத பந்துவீச்சு நடவடிக்கை விதிமுறைகளின்படி, முகமது ஹஸ்னைன் மறுமதிப்பீடு செய்யும் வரை, அவர் சர்வதேச கிரிக்கெட்டில் பந்துவீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்யப்படுவார்.” என்று பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
மேலும், முகமது ஹஸ்னைன் தனது பந்துவீச்சு நடவடிக்கையை மாற்றியமைக்க பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தால் நியமிக்கப்பட்ட பந்துவீச்சு ஆலோசகருடன் இணைந்து பயிற்சி பெறுவார் என்றும் இதனால் அவர் மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கலாம் மற்றும் நடைமுறையில் முடிந்தவரை விரைவாக சர்வதேச கிரிக்கெட்டுக்கு திரும்ப தகுதி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
21 வயதான முகமது ஹஸ்னைன் 8 ஒரு நாள் சர்வதேசப் போட்டிகளிலும் 18 இருபதுக்கு இருபது (t20) போட்டிகளிலும் பாகிஸ்தானுக்காக விளையாடிய இவர் இதுவரை 29 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.