பாகிஸ்தானில் ஓடும் பேருந்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 குழந்தைகள் உள்பட 21 பேரில் உடல் கருகி பரிதாபமாக இறந்தனர்.
பாகிஸ்தானின் கராச்சி அருகே நூரியா பாத் பகுதியில் கடந்த அக்டோபர் 12-ம் தேதி நள்ளிரவு தனியார் பேருந்து ஒன்று 50-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பயணித்து கொண்டிருந்த போது திடீரென்று தீப்பிடித்தது.
தீயை கண்டு அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் பேருந்தை உடனே நிறுத்தினார். இருப்பினும், பேருந்து முழுவதும் தீ மளமளவென பரவியது. பயணிகளும் பதைபதைத்தனர். பயணிகள் சிலர் பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து கீழே குதித்து உயிர் தப்பினர்.
ஆனால், பேருந்தை விட்டு வெளியேற முடியாமல் அதற்குள்ளே சிக்கி கொண்ட குழந்தைகள் உள்பட 21 பேர் தீயில் கருகி பேருந்தினுள்ளே உயிரிழந்தனர். மேலும், படுகாயம் அடைந்த 25-க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்புப் படை வீரர்கள் சில நிமிடங்கள் போராடி பேருந்தில் பிடித்த தீயை அணைத்தனர். பேருந்தில் இருந்த குளிர்சாதன பகுதியில் தீப்பிடித்து இந்த கோர விபத்து நிகழ்ந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
முன்னதாக, பாகிஸ்தானில் சமீபத்தில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டதால் 1,700 பேர் பலியாகினர். 33 லட்சம் பேர் இடம் பெயர்ந்தனர். இச்சூழலில், வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள்தான் தீப்பிடித்த பேருந்தில் பயணித்து வந்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
இதையும் படிங்க:நயன்தாரா- விக்னேஷ் வாடகை தாய் விவகாரம்; ஒரு வாரத்தில் உண்மை வெளிவரும் என அமைச்சர் தகவல்