கேரளாவில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 27 பேர் உடல்நிலைக் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கேரளாவின் எர்ணாகுளம் மாவட்டத்தின் வடக்கு பரவூரில் உள்ள ஒரு உணவகத்தில் சாப்பிட்ட 27 பேர் பல்வேறு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவர்களின் உடல்நிலை தற்போது சீராக இருப்பதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
மேலும், இந்தச் சம்பவம் தொடர்பாக உணவகத்தின் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரிக்கலாம் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சமீப காலமாகவே கேரளாவில் அசுத்தமான உணவால் மக்கள் பலவித இன்னல்களுக்கு உள்ளாகி வருகின்றனர். இதைத்தொடர்ந்து, தற்போது அசுத்தமான உணவை விற்கும் உணவகங்களுக்கு எதிராக மாநில அரசு பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது. இந்நிலையில், இப்படியான சம்பவம் நடைபெற்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்போது அந்த உணவகம் அதிகாரிகளால் சீல் வைக்கப்பட்டு மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, கேரளாவில் செவலியர் ஒருவரும், மாணவி ஒருவரும் ஹோட்டலில் சாப்பிட்ட உணவால் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.