அ.தி.மு.க பொதுக்குழு செல்லும் என்ற சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் ஓ.பி.எஸ் தரப்பு இன்று மேல்முறையீடு செய்ய உள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி தரப்பில் இருந்து கேவியட் மனுக்கள் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
அ.தி.மு.கவின் பொதுக்குழு தொடர்பான மேல்முறையீட்டு வழக்கில் ஜூலை 11-ந் தேதி நடைபெற்ற பொதுக்குழு செல்லும் என்றும், இது தொடர்பாக தனி நீதிபதி வழங்கிய தீர்ப்பு ரத்து செய்யப்படுவதாகவும் கடந்த 2-ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பினை அளித்தது .
அந்த தீர்ப்பில் நீதிபதிகள், அ.தி.மு.க. பொதுக்குழு தீர்மானங்களை எதிர்த்து வழக்கு தொடராத நிலையில், அதற்கு முந்தைய நிலையே நீடிக்க வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்க முடியாது. இருவரும் இணைந்துதான் கூட்டங்களை கூட்ட வேண்டும் என்ற உத்தரவு நடைமுறைக்கு சாத்தியமில்லாதது. எனவே தனி நீதிபதியின் தீர்ப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தெரிவித்திருந்தனர் .
இந்த தீர்ப்பினை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் இன்று(5-ஆம் தேதி ) மேல்முறையீடு செய்யப்போவதாக ஓ.பி.எஸ் தரப்பு ஏற்கனவே அறிவித்திருந்ததால் ,அவர்களின் மனு விசாரணைக்கு வருவதற்கு முன்பாகவே, எடப்பாடி பழனிசாமி ,அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் பாலாஜி சீனிவாசன் என்பவரை வைத்து உச்ச நீதிமன்றத்தில் கேவியட் மனுக்களை தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் அதிமுக மேல்முறையீடு மனுக்கள் தாக்கல் செய்யும்போது, தங்களது தரப்பு கருத்தை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்கக்கூடாது என்ற வாதத்தை முன்னெடுத்தது வைத்துள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க : ‘‘ஏணி தோணி அண்ணாவி நாரத்தை’’ 4 வார்த்தைகளில் அன்புமணி ஆசிரியர் தின வாழ்த்து!