ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும், விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதியளித்து இருப்பதாகவும் அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா கடந்த அக்டோபர் மாதம் சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு நிறைப்வேற்றப்பட்டது. பிறகு இந்த மசோதா ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது. அப்போது இந்த சட்ட மசோதாவுக்கு ஆளுநர் உடனடியாக ஒப்புதல் வழங்கவில்லை.
இதற்கு ஆளுநர் இந்த மசோதா குறித்த சில கேள்விகளை கேட்டிருந்தார். இதற்கு தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்நிலையில் அந்த விளக்கத்தை ஆளுநர் ஆய்வு செய்து வருகிறார்.
இந்நிலையில் இன்று கிண்டி ஆளுநர் மாளிகையில் ஆளுநர் ஆர்.என்.ரவியை சட்டத்துறை அமைச்சரான ரகுபதி நேரில் சந்தித்து பேசினார்.
இதன் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சட்டத்துறை அமைச்சர், ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா குறித்து ஆளுநருக்கு நேரில் விளக்கம் அளித்ததாகவும், ஆளுநர் சில சந்தேகங்களை கேட்டதாகவும் அதற்கு பதில் அளித்ததாகவும் கூறினார்.
ஆன்லைன் சூதாட்டத்தடை மசோதா பரிசீலனையில் இருப்பதாகவும் விரைந்து நடவடிக்கை எடுப்பதாக ஆளுநர் உறுதி அளித்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
தற்போது வரை 21 மசோதாக்கள் நிலுவையில் இருப்பதாகவும், குறிப்பிட்ட காலத்திற்குள் ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும் என எந்த நிர்ணயமும் இல்லை என்றும், அதனால், குறிப்பிட்ட காலத்தை நிர்ணயிக்கும்படி நாம் கேட்க முடியாது என்றும் அமைச்சர் ரகுபதி தெரிவித்தார்.