வெள்ளித்திரையில் வெள்ளிக்கிழமை தோறும் பல்வேறு திரைப்படங்கள் படையெடுக்கின்றன. அந்த வகையில் இந்த வாரம் வெளியாகவுள்ள தமிழ் திரைப்படங்கள் என்னென்ன என்பதை இங்கே காணலாம்.
டிஎஸ்பி
நடிகர் விஜய்சேதுபதி நடிப்பில் தற்போது உருவாகியுள்ள திரைப்படம்தான், டிஎஸ்பி. இத்திரைப்படத்தை, வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா போன்ற திரைப்படங்களை இயக்கிய பொன்ராம் இயக்கியுள்ளார். டி. இமான் இசையமைத்துள்ள இத்திரைப்படத்தை இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் தயாரித்துள்ளது.
வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் போன்ற திரைப்படங்கள் மாபெரும் ஹிட் அடிக்க, சீமராஜா எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதேசமயம், விஜய்சேதுபதி நடிப்பில் வெளிவந்த கடைசி விவசாயி, விக்ரம், மாமனிதன் போன்ற திரைப்படங்கள் பெரும் ஹிட் அடித்தது.
இப்படியாக சூழல்கள் இருக்க, இவர்கள் கூட்டணியில் உருவாகியிருக்கும் டிஎஸ்பி திரைப்படம் நாளை (டிசம்பர்-2 ஆம் தேதி) வெளியாகவுள்ளது. முன்னதாக, இத்திரைப்படத்தின் ட்ரைலரும், பாடல்களும் ரசிகர்களை கவர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
கட்டா குஸ்தி
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் பொன்னியின் செல்வன் புகழ் ஐஸ்வர்யா லக்ஷ்மி ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம்தான், கட்டா குஸ்தி. இயக்குநர் செல்லா அய்யாவு இயக்கத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படத்தை தெலுங்கு நடிகர் ரவி தேஜா மற்றும் விஷ்ணு விஷால் இணைந்து தயாரித்துள்ளனர்.
ராட்சசன் மற்றும் எப்.ஐ.ஆர் திரைப்படங்களைத் தொடர்ந்து விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியாகவுள்ள கட்டா குஸ்தி மக்களிடையே நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கபடுகிறது.
கட்டா குஸ்தி திரைப்படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்க, காளி வெங்கட், முனீஸ்காந்த் போன்றோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாளை (டிசம்பர்-2 ஆம் தேதி) வெளியாகவுள்ளது.
வதந்தி
எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் பலரின் எதிர்பார்ப்புக்கும் மத்தியில் நாளை ஓடிடியில் வெளியாகவுள்ள சீரிஸ்தான், வதந்தி. லீலை, கொலைகாரன் போன்ற திரைப்படங்களை இயக்கிய ஆண்ட்ரூ லூயிஸ் இந்த சீரிஸை இயக்கியுள்ளார்.
மேலும், விக்ரம் வேதா திரைப்படத்தை இயக்கிய புஷ்கர் – காயத்ரி ‘வதந்தி’-யை தயாரித்துள்ளனர். இந்த சீரிஸின் ட்ரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
க்ரைம் த்ரில்லர் பாணியில் உருவாகியிருக்கும் வதந்தி, நாளை அமேசான் பிரைமில் வெளியாகவுள்ளது.
கோல்டு
நிவின் பாலி நடிப்பில் கடந்த 2015-ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படம், பிரேமம். மூன்று பருவங்களில் நிகழும் காதல் கதையை மிகவும் அழகாக பிரேமம் திரைப்படம் காட்சிப்படுத்தியது. மலையாளத்தில் வெளிவந்திருந்தாலும், இந்திய அளவில் பிரேமம் திரைப்படம் பெரும் வரவேற்பை பெற்றது. குறிப்பாக தமிழகத்தில் தொடர்ந்து ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக பிரேமம் ஓடியது.
மாபெரும் வெற்றிப் பெற்ற பிரேமம் திரைப்படத்தை, இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கியிருந்தார். பிரேமம் திரைப்படத்திற்கு முன்பாக, இவரின் இயக்கத்தில் வெளிவந்த ‘நேரம்’ திரைப்படமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
இப்படியாக நேரம், பிரேமம் என இரு வெற்றித் திரைப்படங்களை இயக்கிய அல்ஃபோன்ஸ் புத்திரன் கிட்டத்தட்ட 7 வருடங்களுக்குப் பிறகு ‘கோல்டு’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். பிரித்விராஜ், நயன்தாரா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள ‘கோல்டு’, இன்று தமிழ் மற்றும் மலையாளத்தில் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
திரையரங்குகளில் மாபெரும் ஹிட் அடித்த லவ்-டுடே, நித்தம் ஒரு வானம் போன்ற திரைப்படங்கள் நாளை நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
முத்தத்தால் ஆரம்பித்த சிம்புவின் பாடல்…மிரட்டிய ஷ்ரேயா கோஷல்