ரூ.1500 கடன் வாங்கியமைக்காக இளைஞரை கயிறு கட்டி 2 கிலோ மீட்டர் தூரம் வரை ஓடவைத்தது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
ஓடிசா மாநிலம் கட்டாக் நகரில் வசிக்கும் ஜெகநாத் பெஹரா. இவருக்கு 22 வயதாகிறது. இவர் கட்டாக் நகரில் வசித்து வரும் பணம் கொடுக்கும் இருவரிடம், ரூ 1,500 கடன் வாங்கியிருந்தார்.
ஜெகநாத் பெஹரா பெற்ற கடனை அவரால் குறித்த தினத்திற்குள் திருப்பித் தர முடியவில்லை. மேலும், சில நாட்கள் அவகாசம் கேட்டார். இதனால், பணம் தந்தவர்கள் ஆத்திரமடைந்துள்ளனர்.
இதையடுத்து, ஜெகநாத்தின் கைகளை 12 அடி நீள கயிற்றில் கட்டி, அதை தங்கள் மோட்டார் சைக்கிளின் பின்புறத்தில் இணைத்தனர். பின், ஸ்டூவர்ட்பட்னா சதுக்கத்தில் இருந்து, 2 கி.மீ தூரத்தில் உள்ள சுதாஹத் சதுக்கம் வரை மோட்டார் சைக்கிளை இவரை வைத்து வேகமாக ஓட்டிச் சென்றனர்.
அந்த மோட்டார் சைக்கிளை தொடர்ந்து, ஜெகநாத் பெஹரா அதிவேகமாக மூச்சிரைக்க ஓடிவந்தார். இந்த காட்சியை பலர் ‘வீடியோ’ வாக எடுத்து சமூகவலைதளங்களில் பதிவிட்டனர்.
இத்தகவல், உடனடியாக காவல்நிலையத்தை எட்ட தகவலறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து ஜெகநாத் பெஹராவை மீட்டு இருவரையும் கைது செய்தனர்.
இதையும் படிங்க: டி20 உலகக் கோப்பையில் ‘தமிழன்’ படைத்த ஹாட்ரிக் சாதனை! இலங்கைக்கு எதிரான ஆட்டத்தில் அசத்தல்