தமிழகத்தில் கடந்த 8 ஆண்டுகளுக்கு பிறகு மாற்றியமைக்கப்பட்ட புதிய மின் பயன்பாட்டுக்கான கட்டண உயர்வை தொடர்ந்து, தற்போது மின் இணைப்புகளுக்கான கட்டணமும் அதிரடியாக உயர்த்தப்பட்டுள்ளது.
தமிழ்நாடு மின்சார வாரியம் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பது, புதிய கருவிகள் கொள்முதல் செய்வது உள்ளிட்ட பல்வேறு புதிய நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனால் கடந்த 10 ஆண்டுகளில் மின் வாரியத்தின் கடன் அளவு ரூ.12 ஆயிரத்து 647 கோடியாக உயர்ந்துள்ளது.
இதனால் மத்திய மின்சார ஒழுங்குமுறை ஆணையம் மின் கட்டணத்தை மாற்றி அமைக்க கூறி தமிழக மின்சார வாரியத்தை கேட்டுக்கொண்டது. தமிழ்நாடு மின்சார வாரியமும் நஷ்டத்தில் இயங்கி வருவதால் வருவாயை அதிகரிக்க வேண்டுமானால், மின் கட்டணத்தை உயர்த்தியாக வேண்டும் என்று முடிவு செய்து, தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் கடந்த ஜூலை 18-ந் தேதி கட்டண உயர்வுக்கு அனுமதி வழங்க கேட்டு மனுக்களை சமர்ப்பித்தது.
இதனையடுத்து மின் கட்டண உயர்வு தொடர்பாக மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் சென்னை, திருச்சி, மதுரை, கோவை நகரங்களில் பொதுமக்களிடம் கருத்துகேட்பு கூட்டம் நடத்தப்பட்டு, பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பல தரப்பிலும் இருந்து வந்த எதிர்ப்புகளையெல்லாம் தாண்டி, எட்டு ஆண்டுகளுக்கு பிறகு புதிய மின் கட்டண கொள்கையை தமிழகத்தில் அமல்படுத்தியது.
மின் கட்டண உயர்வுக்கே பலரும் தங்களது கண்டன குரல்களை எழுப்பி வரும் நிலையில் தற்போது மீண்டும் தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை என, இரு பிரிவுகளில் வழங்கப்படும் மின் இணைப்புகளுக்கும் கட்டணத்தை உயர்த்தி, அதற்கான கட்டண உயர்வையும் தமிழ்நாடு மின்சார வாரியம் இன்று அமல் படுத்தியுள்ளது. இதில் ஒரு முனைக்கு ரூ.9,250 என்றும், மும்முனைக்கு ரூ.9,600 என்றும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் வீடுகளுக்கு ஒருமுனை, மும்முனை என இரு பிரிவுகளில் மின் இணைப்பு வழங்கப்பட்டு வருகிறது. புதிய மின் இணைப்பு வழங்கும் போது பதிவு கட்டணம், இணைப்பு கட்டணம், மீட்டர் காப்பீடு, வளர்ச்சி கட்டணம், வைப்புத்தொகை உள்ளிட்ட பலவற்றிற்கும் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
அதில் வளர்ச்சி கட்டணம் என்று சொல்லப்படும், அதாவது தரைக்கு அடியில், கேபிள் வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடங்களுக்கும் மின் கம்பத்தில் வினியோகம் செய்யும் இடங்களுக்கு மட்டும் வேறுபடுகிறது. ஒருமுனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம், 100 ரூபாய்; இணைப்பு கட்டணம், 500; மீட்டர் காப்பீடு, 600; வளர்ச்சி கட்டணம், 1,400; வைப்பு தொகை, 200 என, மொத்தம் 2,800 ரூபாய் வசூலிக்கப் பட்டது.
கேபிள் வழியாக மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம் 100 ரூபாயாகவும், இணைப்பு கட்டணம், 500 ரூபாயாகவும், மீட்டர் காப்பீடு 600ரூபாயாகவும், வளர்ச்சி கட்டணம் 5,000 ரூபாயாகவும், வைப்பு தொகை 200 ரூபாயாகவும் நிர்ணயிக்கப்பட்டு மொத்தம் 6,400 ரூபாய் வசூலிக்கப்பட்டது. அதேபோல, மும்முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில், 5,150 ரூபாயும், கேபிள் வாயிலாக மின் வினியோகிக்கும் இடங்களில், 6,650 ரூபாயும் வசூலிக்கப்பட்டது.
இந்நிலையில் ஒரு முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய், இணைப்பு கட்டணம் 1,000 ரூபாய், மீட்டர் காப்பீடு 750 ரூபாய் , வளர்ச்சி கட்டணம் 2,800 ரூபாய் , வைப்பு தொகை 300 ரூபாய் என மொத்தம் 5,050 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
கேபிள் மின் வினியோகிக்கும் இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய் , இணைப்பு கட்டணம் 1,000 ரூபாய், மீட்டர் காப்பீடு 750 ரூபாய், வளர்ச்சி கட்டணம் 7,000 ரூபாய் , வைப்பு தொகை 300 ரூபாய் என மொத்தம் 9,250 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மும்முனை இணைப்புக்கு மின் கம்பம் உள்ள இடங்களில் பதிவு கட்டணம் 200 ரூபாய் ,இணைப்பு கட்டணம் 1,500 ரூபாய் ,மீட்டர் காப்பீடு 2,000 ரூபாய் , வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு 2,000 ரூபாய் ,வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 ரூபாய் என, மொத்தம் 6,600 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
இதில் கேபிள் மின் வினியோகத்திற்கு பதிவு கட்டணம் 200 ரூபாய் ,இணைப்பு கட்டணம் 1,500 ரூபாய் ,மீட்டர் காப்பீடு 2,000 ரூபாய் ,வளர்ச்சி கட்டணம் கிலோ வாட்டிற்கு 5,000 ரூபாய், வைப்பு தொகை கிலோ வாட்டிற்கு 900 ரூபாய் என மொத்தம் 9,600 ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
மேலும் வீடுகளுக்கு ஆளில்லாமல் மின் பயன்பாட்டை கணக்கெடுக்கும், ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்பட உள்ளது. அப்போது, ஒருமுனை மின் இணைப்பிற்கு மீட்டர் வைப்பு தொகையாக, 5,200 ரூபாயும், மும்முனை இணைப்பிற்கு 7,100 ரூபாயும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளை உள்ளடக்கிய தாழ்வழுத்த பிரிவில், மின் இணைப்பு பெயர் மாற்றம் செய்வதற்கான கட்டணம், 300 ரூபாயில் இருந்து, 600 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது, உயரழுத்த பிரிவில், 3,000 ரூபாயில் இருந்து 6,000 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
உயரழுத்த பிரிவில் மீட்டர் வாடகை கட்டணம் 2,600 ரூபாயில் இருந்து, 3,700 ரூபாயாக அதிகரிக்கப்பட்டுள்ளதை போல் தாழ்வழுத்த பிரிவில் மீட்டர் பழுது, எரிந்தது உள்ளிட்ட காரணங்களுக்காக, மீட்டரை மாற்றும் கட்டணம் ஒருமுனை இணைப்பிற்கு 500 ரூபாயில் இருந்து 1,000 ரூபாயாகவும்; மும்முனை இணைப்பிற்கு 750 ரூபாயில் இருந்து 1,500 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல, தாழ்வழுத்த மற்றும் உயரழுத்த பிரிவில் பல்வேறு சேவைகளுக்கான பல்வகை கட்டணங்களும் உயர்த்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மின்சார வாரியத்தின் இந்த நடவடிக்கை பல்வேறு தரப்பினரையும் வேதனைக்கு உள்ளாக்கியுள்ளது.
இதையும் படிங்க: தமிழகத்தில் புதிய மின் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது! யூனிட்டுக்கு எவ்வளவு? முழு விவரம் உள்ளே