ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினரான திருமகன் ஈ.வெ.ரா உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்தத் தொகுதி காலியானதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இந்திய தேர்தல் ஆணையம் கடந்த 18 ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 31 ஆம் தேதி வேட்புமனு தாக்கலும் அதைத்தொடர்ந்து பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவும், இதைத்தொடர்ந்து மார்ச் 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இரண்டு அணிகளாக பிளவுபட்டிருக்கும் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி தரப்பிலும், ஓ.பன்னீர் செல்வம் தரப்பிலும் வேட்பாளர்களை நிறுத்தப்போவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இன்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் பாமக போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை என தெரிவித்துள்ளார்.
மேலும் இடைத்தேர்தல்கள் தேவையற்றவை என்றும், மக்களின் வரிப் பணத்தையும் நேரத்தையும் வீணடிப்பவை என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய பாமக தலைவர், பொதுத்தேர்தலில் எந்தக் கட்சி வெற்றி பெற்றதோ அந்தக் கட்சியைச் சேர்ந்த ஒருவரையே பேரவை உறுப்பினர் ஆக்கிவிடலாம் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு என்றும் தெரிவித்தார்.
என்னப்பா இப்படி பண்றியே… சிரிப்பலைகளை வரவழைத்த ரோஹித் சர்மாவின் செயல்