இந்தியாவுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் நியூசிலாந்து அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.
நியூசிலாந்து அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இந்தச் சுற்றுப்பயணத்தில் நடைபெற்ற முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி வென்ற நிலையில், தற்போது இரண்டாவது ஒருநாள் போட்டி ராய்பூரில் நடைபெற்று வருகிறது.
இப்போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து அணி பேட்டிங்கில் களமிறங்கியது. போட்டியின் முதல் ஓவரிலேயே ஷமி ஃபின் ஆலனை போல்ட் செய்தார்.
இதைத்தொடர்ந்து, நியூசிலாந்து பேட்டர்கள் தொடர்ந்து தங்களது விக்கெட்டுகளை இழந்த வண்ணம் இருந்தனர். 15 ரன்களுக்கே நியூசிலாந்து அணி 5 விக்கெட்டுகளை இழந்து பெரிய தடுமாற்றத்திற்கு உள்ளானது.
இந்த தடுமாற்றத்தை நிறுத்த நியூசிலாந்து வீரர்கள் எவ்வளவு முயற்சித்தும் அது நடைபெறவில்லை. அதிகபட்சமாக, நியூசிலாந்து அணியின் பிலிப்ஸ் 36 ரன்களையும், சான்ட்னர் 27 ரன்களையும், பிரேஸ்வெல் 22 ரன்களையும் எடுத்தனர். மற்ற வீரர்கள் சொற்ப ரன்களுக்கு பெவிலியன் திரும்பினர்.
மொத்தத்தில், நியூசிலாந்து அணி 34.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 108 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணித் தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்டுகளையும், வாஷிங்கடன் சுந்தர், ஹர்திக் பாண்டியா தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர். சீராஸ், குல்தீப் யாதவ், தாகுர் போன்றோர் தலா ஒரு விக்கெட்டை வீழத்தினர்.
தற்போது இந்திய அணி 109 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிதான இலக்குடன் களமிறங்கி விளையாடி வருகிறது.
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்; பாமக போட்டியும் இல்லை; யாருக்கும் ஆதரவும் இல்லை