நடப்பாண்டுக்கான உலகக் கோப்பை கால்பந்து போட்டி கத்தாரில் தற்போது நடைபெற்று வருகிறது. நவம்பர் 20-ஆம் தேதி தொடங்கிய இப்போட்டியானது டிசம்பர் 18-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்நிலையில் இப்போட்டியில் நேற்றைய தினத்தில் நான்கு ஆட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஈகுவேடர் மற்றும் செனகல்
இரு அணிகளும் மோதிக்கொண்ட நேற்றைய ஆட்டத்தில் மூன்று கோல்கள் அடிக்கப்பட்டன. செனகல் அணியின் இஸ்மாயிலா சார் 44 வது நிமிடத்தில் கோல் அடிக்க, செனகல் முன்னிலை வகித்தது.
இதைத்தொடர்ந்து, ஈகுவேடர் அணி கோல் போடும் முயற்சியில் தீவிரமாய் களமிறங்க, 67-ஆவது நிமிடத்தில் அந்த அணியின் வீரர் கேய்ஸிடோ கோல் அடிக்க, இரு அணிகளும் சமனில் இருந்தது.
இதன்பின்பு, 70-ஆவது நிமிடத்தில் செனகல் வீரர் கலிடோ ஒரு கோல் அடிக்க, 2-1 என்ற கணக்கில் செனகல் அணி ஈகுவேடரை வீழ்த்தியது.
நெதர்லாந்து மற்றும் கத்தார்
இந்த இரு அணிகளுக்கான நேற்றைய ஆட்டம் என்பது ஒரு பக்கமே கடைசி வரை ஓங்கியிருந்தது. நடப்பாண்டிற்கான உலகக் கோப்பையை நடத்தி வரும் கத்தார் அணி, ஆட்டத்தின் முடிவில் வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை.
அதேசமயம், நெதர்லாந்து அணி இரு கோல்கள் அடிக்க, 2-0 என்ற கணக்கில் நெதர்லாந்து அணி கத்தார் அணியை வீழ்த்தியது.
ஈரான் மற்றும் அமெரிக்கா
ஈரான் மற்றும் அமெரிக்கா அணிகள் மோதிய ஆட்டத்தில் முதல் பாதியிலே அமெரிக்க வீரர் கிறிஸ்டியன் புளிசிக் கோல் அடித்தார். இதனால், ஆட்டத்தின் மீது எதிர்பார்ப்பு தொற்றிக்கொண்டது. ஆனால், இதன்பின்பு இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை.
இதன்மூலம், 1-0 என்ற கணக்கில் அமெரிக்கா ஈரான் அணியை தோற்கடித்தது.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ்
இந்த இரு அணிகள் மோதிய ஆட்டத்தின் முதல் பாதியில் இரு அணி வீரர்கள் கடுமையாக முயற்சித்தும் கோல் எதுவும் அடிக்கப்படவில்லை. இரண்டாம் பாதியின் 50-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து வீரர் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஃப்ரீ கிக் வாய்ப்பில் கோல் அடித்தார்.
இந்த அதிர்ச்சியில் இருந்து வேல்ஸ் வீரர்கள் மீள்வதற்குள் 51-ஆவது நிமிடத்தில் இங்கிலாந்து அணி மீண்டும் கோல் அடித்தது. ஹாரி கேன் கிராஸ் செய்த பந்தை ஃபில் போடன் வலைக்குள் செலுத்தினார்.
68-ஆவது நிமிடத்தில் மார்கஸ் ராஷ்ஃபோர்ட் ஆட்டத்தில் தனது இரண்டாவது கோல் அடித்தார். இறுதியில் 3-0 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது.
இந்தியாவே நடுங்கிய அந்த நாள்; மும்பை டைரீஸ் 26/11 – திரைப்பார்வை!