விழுப்புரம் அன்புஜோதி ஆசிரமத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட விவகாரம் குறித்து தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு, 4 வாரத்தில் பதில் அளிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
விழுப்புரத்தில் அமைந்துள்ள அன்புஜோதி ஆசிரமத்தில் தங்கி இருந்த பெண்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண்களை அந்த ஆசிரமத்தை நடத்தி வந்தவர்களே பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
இந்தச் சம்பவம் தொடர்பாக ஏற்கனவே தேசிய மகளிர் ஆணையம் மற்றும் மாநில மனித உரிமைகள் ஆணையம், தமிழக அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. இந்நிலையில், தேசிய மனித உரிமைகள் ஆணையம் தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபுவுக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளது.
இதுகுறித்து தெரிந்து தானாக முன்வந்து வழக்குப்பதிவு செய்துள்ள தேசிய மனித உரிமைகள் ஆணையம், தமிழ்நாடு டிஜிபி மற்றும் தலைமைச் செயலாளர் ஆகியோர் இந்தச் சம்பவம் தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து நாகு வார காலத்திற்குள் விரிவான பதில் அளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளது.
மேலும் இடைப்பட்ட காலத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஏதேனும் நிவாரணம் வழங்கி இருந்தால் அதுகுறித்த விவரங்களையும் வழங்க வேண்டும் என உத்தரவு பிறப்பித்துள்ளது.
அதோடு இந்த விவகாரத்தை தமிழ்நாடு காவல்துறை தனிப்படை அமைத்து சம்பந்தப்பட்ட ஆசிரமத்திற்கு நேரில் சென்று விரிவான விசாரணை நடத்த வேண்டும். பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் நேர்மையான விசாரணையாக அது நடைபெற வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளது.
தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பா ? – வானிலை ஆய்வு மையம் சொல்வது என்ன?