சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் தீபாவளி முதல் 5 ஜி சேவை அறிமுகப்படுத்தப்படும் என ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார்.
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் 45-வது ஆண்டு பொதுக்கூட்டம் இன்று (ஆகஸ்ட் 29) நடைபெற்று வருகிறது.
இதில், கலந்துகொண்ட ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் தலைவரும் நிர்வாக இயக்குநருமான முகேஷ் அம்பானி பேசியதாவது:
நாட்டின் வளர்ச்சிக்கு ஜியோ நிறுவனம் முக்கிய பங்காற்றி வருகிறது. ஜியோ வாடிக்கையாளர்கள் மாதத்திற்கு 20 ஜி.பி. டேட்டாவை பயன்படுத்துகிறார்கள்.
தீபாவளி முதல் சென்னை, மும்பை, கொல்கத்தா, தில்லி ஆகிய நகரங்களில் ஜியோவின் 5 ஜி இணைய சேவை அறிமுகப்படுத்தப்படும்.
ஜியோவின் 5 ஜி இணைய சேவை உலகிலேயே மிகப்பெரிய மற்றும் அதிநவீன 5 ஜி இணைய சேவையாக இருக்கும். ஜியோவில் கடந்த ஆண்டு 2.32 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் 5 ஜி இணைய சேவையை உருவாக்க ஜியோ 2000 கோடி ரூபாய் முதலீடு செய்கிறது. மத்திய அரசின் திறமையான மேலாண்மை மற்றும் நடைமுறைக்கேற்ற செயல்பாடு இந்தியாவை பொருளாதார நெருக்கடியிலிருந்து வளர்ச்சி பாதைக்கு அழைத்துச் செல்ல உதவியது. உலகம் முழுவதும் பொருளாதார பாதிப்பு உள்ளது. ரிலையன்ஸ் நிறுவனம் 1.88 லட்சம் கோடி வரி செலுத்தியுள்ளது.
இவ்வாறு, அவர் பேசியுள்ளார்.
5 ஜி இணைய சேவையானது இப்போது உள்ள 4 ஜி சேவையைக் காட்டிலும், 10 மடங்கு வேகத்தில் தரவுகளை விரைவாக பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கம் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.