ராப் பாடகர் சித்து மூஸ்வாலாவின் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
பஞ்சாபின் மான்சா மாவட்டம், மூஸா கிராமத்தை சேர்ந்த ராப்பாடகரான சித்து மூஸ்வாலா கடந்த மே 29-ம் தேதி மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதையடுத்து, கொலைக்கு காரணமானவர்களை காவல்துறை தேட, கொலைக்கு கனடாவை சேர்ந்த ரவுடி கோல்டி பிரார் பொறுப்பேற்றார். வழக்கின் முக்கியத்துவம் கருதி பாடகர் சித்து மூஸ்வாலா கொலை வழக்கை தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரித்து வருகிறது.
கோல்டி பிராரின் நெருங்கிய நண்பர் லாரன்ஸுக்கும் கொலையில் தொடர்பு இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. இதன்பின்னர், தீவிரவாத அமைப்புகளுடன் கோல்டி பிரார், லாரன்ஸுக்கு தொடர்பிருப்பதால் அவர்கள் சார்ந்த குழுக்கள் தீவிரவாத அமைப்புகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், சித்து மூஸ்வாலா கொலைக்கு காரணமான ரவுடி கோல்டி பிரார் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஆனால், இதுவரையில் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகளை மத்திய அரசு வெளியிடவில்லை.