பல்வேறு மசோதாக்களை நிறைவேற்றுவதற்காக நாடாளுமன்றத்தில் இன்று மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கவுள்ளது. மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கி வரும் ஆகஸ்ட் மாதம் 12ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
18 அமர்வுகள் அடங்கிய இந்த கூட்டத்தொடரில் 32 மசோதாக்கள் பற்றி விவாதிக்கப்பட உள்ளன. குடியரசுத் தலைவர் மற்றும் குடியரசுத் துணைத் தலைவருக்கான தேர்தல்களும் இந்த கூட்டத்தொடரில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
அனைத்து கட்சிகளும் பங்கேற்கும் இந்த கூட்டத்தொடருக்கு ஒன்றிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமை வகிக்கிறார். 14 நாள்களில் 32 மசோதாக்கள் பற்றி ஒன்றிய அரசு விவாதிக்க உள்ளதைப் பற்றி, காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினரும் நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவருமான மல்லிகார்ஜூன் கார்கே
செய்தியாளர்களை சந்தித்து அளித்த பேட்டியில், இந்த அரசாங்கம் என்ன செய்ய முயற்சிக்கிறது என்ற கேள்வியை எழுப்பியுள்ளார்.
மேலும், விலைவாசி உயர்வு, அக்னிபாத் திட்டம், கூட்டாட்சியின் மீதான தாக்குதல்கள் மற்றும் மத்திய புலனாய்வுத்துறை போன்ற நிறுவனங்களை தவறாகப் பயன்படுத்துவது உள்பட 13 மசோதாக்களை எதிர்க்கவுள்ளதாக கூறியுள்ளார்.
ஒன்றிய பிரதமர் நரேந்திர மோடி இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்காதது குறித்து எதிர்க்கட்சிகள் கேள்விகளை எழுப்பி வருகின்றனர்.
இது குறித்து பதிலளித்த நாடளுமன்ற அமைச்சர் ஜோஷி, அரசாங்கத்துக்கு எதிராக எந்த விவகாரமும் இல்லாததால், தேவை இல்லாத பிரச்சனைகளை உருவாக்க எதிர்க்கட்சிகள் முயற்சிக்கின்றன எனக் கூறியுள்ளார்.
முன்னதாக, நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியல் வெளியிடப்பட்டது. இது குறித்து கருத்து தெரிவித்த நாடளுமன்ற அமைச்சர் ஜோஷி, 1954ம் ஆண்டில் இருந்து லோக் சபாவின் செயலகம், நாடாளுமன்றத்தில் பேசக்கூடாத வார்த்தைகள் அடங்கிய பட்டியலை வெளியிட்டு வருதாக குறிப்பிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவைகளும் இன்று கூடியதும் அண்மையில் காலமான முக்கியத் தலைவர்களுக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது. ஜப்பான் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபே, ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபராக இருந்த ரியூடன்ஹா ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நயான், கென்யாவின் முன்னாள் அதிபர் மிவாய் கிபாகி உள்ளிட்டோருக்கு அஞ்சலி செலுத்தப்படவுள்ளது.
இந்திய உளவுத்துறையில் வேலைவாய்ப்பு