தமிழகத்தில் நடைபெறும் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியில் பங்கேற்க வரும் வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை செய்ய தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.
செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அருகே உள்ள பூஞ்சேரி கிராமத்தில் வரும் 28ம் தேதி முதல் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டி நடைபெற உள்ளது. இப்போட்டியில் 87 நாடுகளைச் சேர்ந்த 2,500 வீரர்கள் பங்கேற்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தப் போட்டிக்காக ஃபோர்பாயின்ட்ஸ் என்ற நட்சத்திர விடுதி வளாகத்தில் 52 ஆயிரம் சதுர அடி பரப்பில் நவீன விளையாட்டு அரங்கம் சர்வதேச தரத்தில் அமைக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே உள்ள 22 ஆயிரம் சதுர அடி பரப்பிலான அரங்கம் நவீனப்படுத்தப்படுகிறது. இந்தப் போட்டி அரங்கில் மொத்தம் 700 சதுரங்க போர்டு மேஜைகள் அமைக்கப்பட உள்ளது.
ஒலிம்பியாட் செஸ் போட்டியை பொதுமக்கள் கண்டு ரசிக்கும் வகையில், அங்குள்ள அரங்குகளில் டிஜிட்டல் போர்டுகள் அமைத்தல், 24 மணி நேரமும் செயல்படும் வகையில் கட்டுப்பாட்டு அறை அமைத்தல் போன்ற பணிகளும் நடந்துவருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஆகஸ்ட் 28-ம் தேதி 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டியின் தொடக்கவிழா நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெறவுள்ளது. இத்தொடக்க விழாவில் தமிழ்நாட்டின் பண்பாடு மற்றும் கலாசாரத்தை உலக மக்கள் அறியம் வகையில் பாரம்பரிய கலை நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு சார்பில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
அண்மையில் 44-வது சர்வதேச ஒலிம்பியாட் செஸ் போட்டிக்கான காணொளி வடிவிலான முன்னோட்டத்தை நடிகர் ரஜினிகாந்த் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் ஆகியோரும் அக்காணொளியில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிலையில், செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வரும் வீரர்களுக்கு கொரோனா மற்றும் குரங்கம்மை பரிசோதனை செய்ய தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளது.
மேலும், இந்த பரிசோதனையில் தொற்று இல்லை என்ற முடிவு வந்தால் மட்டுமே வீரர்கள் செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க அனுமதி அளிக்கப்படும் என மருத்துவத்துறை தெரிவித்துள்ளது. பரிசோதனையில் தொற்று உறுதியானால் வீரர்களுக்கு சிகிச்சை அளிக்கவும் தமிழக மருத்துவத்துறை திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
குரங்கம்மை நோயைக் கண்டறிய 15 பரிசோதனை ஆய்வகங்கள் தயார்