நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெற ஆரம்பித்ததில் இருந்து தமிழகத்தில் பரபரப்புக்கு துளியும் பஞ்சமே இல்லை. ஒவ்வொரு கட்சிகளும் தங்களுக்கென தனிப்பட்ட வியூகத்தை வகுத்து அதன்படி இந்த தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர். கட்சிகள் மட்டும் அல்ல, சுயேட்சையாக நிற்பவர்களும் தங்களுக்கென ஒரு வியூகத்தை வகுத்துதான் இந்த தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.
இவர்கள் வகுத்துள்ள வியூகத்தில் நேர்மையான முறைகள் மட்டுமல்லாது மற்றவைகளும் இடம்பெறுள்ளன.ஆம்! பல கட்சி வேட்பாளர்களும் பணப்பட்டுவாடாவில் ஈடுபடுவதாக அறிய முடிகிறது. தேர்தல் பிரச்சாரங்கள் ஆரம்பித்த நாளில் இருந்தே பணப்பட்டுவாடா நிகழ ஆரம்பித்து விட்டது. இவற்றை கட்டுப்படுத்த பறக்கும் படைகள் தொடர்ந்து இயங்கி வந்தாலும், அவர்களின் கண்ணில் மண் தூவியுமே பணப்பட்டுவாடா, பரிசுகள் கொடுத்தல், மது வழங்குதல் என நீண்டு கொண்டு போகிறது.
அவர்கள் கூறியதன் படி, ஒரு ஓட்டுக்கு, 1,000 ரூபாய் முதல், 5,000 ரூபாய் வரை விலைப்பேசப்பட்டு உள்ளதாகவும், பணம், மூக்குத்தி, அரிசி மூட்டை, சேலை, மளிகை பொருட்கள், மிக்சி, குக்கர், கொலுசு, ஹாட்பாக்ஸ் உள்ளிட்ட பரிசு பொருட்களை பட்டுவாடா செய்வதும் தொடர்ந்து அரங்கேறி வருகிறது.
இந்நிலையில், தேர்தல் நாளை மறுநாள் நடைபெற உள்ள நிலையில், பட்டுவாடாக்கள் தொடர்ந்து அதிகமாய் நிகழ வாய்ப்புள்ளது. எனவே, சென்னையில், பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கை, 45ல் இருந்து, 90ஆக உயர்த்தப்பட்டுள்ளது. சென்னையை தவிர்த்து பிற தேர்தல் பகுதிகளிலும் பறக்கும் படை குழுக்களின் எண்ணிக்கை வெகுவாக உயர்த்தப்பட்டுள்ளது.
இன்று முதல் தேர்தல் முடியும் வரை, பறக்கும் படை குழுக்கள், தெருக்கள், சாலைகள், குடியிருப்பு பகுதிகள் என பல்வேறு இடங்களில் தீவிர சோதனையில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், பொதுமக்கள், தேர்தல் தொடர்பான புகார்களை, 1800 425 7012 என்ற எண்ணில், கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தால், உடனடி நடவடிக்கை எடுக்கப்படும். தங்கள் பகுதியில், பணம், பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டாலும் தகவல் தெரிவிக்கலாம் என்றும் மாவட்ட தேர்தல் அதிகாரிகள் கூறி உள்ளனர்!