பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனரும் தலைவருமான டாக்டர் ராமதாஸ் அவர்கள், கட்சி உறுப்பினர்கள் மகிழ்ச்சி அடையும் வகையிலும், தன்னைப் பார்க்க இருக்கும் பல பாட்டாளிகளின் ஏக்கத்தையும் நிறைவேற்றும் வகையில் ஒரு செய்தியை கூறியுள்ளார்.
ஆம்! அதன்படி ராமதாஸ் அவர்கள், கொரோனா வைரஸ் பரவல் காலம் அவரை வீட்டுக்குள் முடக்கிப் போட்டிருப்பது குறித்தும், அதனால் பாட்டாளிகளை சந்திக்க முடியாமல் வாடிக் கொண்டிருப்பது குறித்தும் கூறினார்.
சங்க இலக்கியங்களை படித்தல், நூல்களை எழுதுதல், பிறந்தநாள் கொண்டாடும் பாட்டாளி சொந்தங்களுடன் வாழ்த்து சொல்ல உரையாடி, மரக்கன்றுகள் நடச் செய்தல் இப்படியாகத் தான் எனது நாட்கள் கழிகின்றன எனவும், இடையிடையே சமூகத்திற்கு நல்ல கருத்துகளைக் கூறும் திரைப்படங்களையும் பார்த்தேன் என்றார்.
அப்படியாக அந்த வரிசையில் அவர் பார்த்த திரைப்படம்தான் ’கோடியில் ஒருவன்’. திரைப்படத்தை பார்த்துவிட்டு “ஓர் அரசியல்வாதி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது! ஓர் அரசியல்கட்சி எவ்வாறு இருக்க வேண்டும். எவ்வாறு இருக்கக்கூடாது! மக்கள் யாருக்கு வாக்களிக்க வேண்டும். யாருக்கு வாக்களிக்கக் கூடாது! என்பதை விளக்கும் திரைப்படம் தான் கோடியில் ஒருவன். இந்தத் திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது” என கருத்து தெரிவித்திருந்தார், ராமதாஸ்!
மேலும், இதனிடையே எனக்கும் பாட்டாளிகளுக்கும் நல்ல செய்தி கிடைத்திருக்கிறது என்றவர், தமிழ்நாட்டில் தினசரி கொரோனா வைரஸ் சுமார் 1000 என்ற அளவுக்கு குறைந்து விட்டது எனவும், உள்ளாட்சித் தேர்தல் நடைமுறைகள், பாட்டாளி மக்கள் கட்சியின் நிழல் நிதிநிலை அறிக்கைகள் வெளியீடு ஆகிய பணிகள் முடிவடைந்த பிறகு மாவட்டம் தோறும் சென்று மக்களை சந்திக்கவுள்ளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இது குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிடுவேன் என்றும் அவர் கூறி இருப்பது, அவரது தொண்டர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது!