நடிகர் சூர்யாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் ஆஸ்கர் குழுவில் இணையப்போவதற்காக தனது வாழ்த்துக்களை கூறினார்.
திரையுலகில் மிக உயரிய விருதாக கருதப்படும் ஆஸ்கர் விருதை வழங்கும் குழுவில், கலை மற்றும் அறிவியல் பிரிவின் கீழ் உறுப்பினராக இணைவதற்காக நடிகர் சூர்யாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆஸ்கர் விருது குழுவால், தென்னிந்திய திரையுலகில் இருந்து முதல் முறையாக அழைக்கப்பட்டவர் என்ற பெருமையை நடிகர் சூர்யா பெற்றுள்ளார்.
ஆஸ்கர் குழுவால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பால் பல்வேறு தரப்பில் இருந்தும், நடிகர் சூர்யாவுக்கு வாழ்த்துகள் குவிந்த வண்ணம் உள்ளன. இதனால், சமூக வலைதளங்களில் பெரும் பேசுபொருளாக சூர்யா மாறியுள்ளார்.
இந்நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில்,
“தனது தேர்ந்த நடிப்பாற்றலுக்கும்; சமூக அக்கறை கொண்ட கதைத்தேர்வுகளுக்கும் மாபெரும் அங்கீகாரமாக, ஆஸ்கர் விருது தேர்வுக்குழுவில் இடம்பெற அழைப்பு பெற்ற முதல் தென்னிந்திய நடிகர் என்ற உலகப் பெருமையை அடைந்துள்ள தம்பி சூர்யா அவர்களுக்கு எனது பாராட்டுகள்!“ என தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் இந்த வாழ்த்துக்கு, நடிகர் சூர்யா “ தங்கள் வாழ்த்து மகிழ்ச்சி அளிப்பதோடு பொறுப்புணர்வையும் உணர்த்துகிறது. நல்ல படைப்புகளைத் தொடர்ந்து தர முயற்சிக்கிறேன்.. தங்கள் அன்புக்கு மனம் நிறைந்த நன்றிகள் “ என்று பதில் அளித்துள்ளார்.
ஆஸ்கருக்கு வாருங்கள்! நடிகர் சூர்யாவிற்கு அழைப்பு!