ட்விட்டர் வலைதளத்தில் பரபரப்பான செய்திகளுக்கும், வினோதமான தகவல்களுக்கும், விசித்திரமான நிகழ்ச்சிகளடங்கிய காணொளிகளுக்கும் பஞ்சம் இருந்ததே இல்லை. அந்த வகையில் இன்று இந்திய வனத்துறை அதிகாரி சுசந்தா நந்தா என்பவர் பகிர்ந்த காணொளி ஒன்று பெரும் வரவேற்பினைப் பெற்றுவருகிறது.
சுசந்தா நந்தா பகிர்ந்துள்ள அந்தக் காணொளியில், ஒரு ஏறும்புக் கூட்டமானது தங்கச் சங்கிலி ஒன்றினை இழுத்துச் செல்லும் காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த காணொளியினைக் கண்ட சமூக வலைதளவாசிகள் பல்வேறு கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
வித்தியாசமாகவும் அதே சமயம் சிரிப்பினை ஏற்படுத்தும் வகையிலும் இருக்கும் இந்த காணொளிக்கு பல வலைதளவாசிகளும் நகைப்பூட்டும் வகையில் கருத்துகளைப் பதிவிட்டு வருகின்றனர்.
Tiny gold smugglers 😀😀
The question is,under which section of IPC they can be booked? pic.twitter.com/IAtUYSnWpv— Susanta Nanda IFS (@susantananda3) June 28, 2022
‘ஒரு சர்க்கரைத் துண்டினை போட்டால் எறும்புகளின் கவனம் சிதறிவிடும்.’ என்று கூறியுள்ள ஒருவரது கருத்துக்கு ‘அந்த தங்கச்சங்கிலியினை அணிந்தவர் ஒரு பேக்கரியில் வேலை செய்திருப்பார். எனவே அந்த சங்கிலியில் சர்க்கரையானது ஒட்டியிருக்கும். அதனால் தான் அதனை எறும்புகள் இழுத்துச் செல்கின்றன.’ என்று மற்றொருவர் நகைச்சுவையாகக் கூறியுள்ளார்.
எறும்புகளின் இந்த செயலினை கூட்டுச் சதி என்று ஒருவர் கேலியாக தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். மற்றொரு நபர் எந்த சட்டத்தின் கீழ் எறும்புகளை கைது செய்யப்போகிறீர்கள் எனவும் கேட்டுள்ளார்.
பொதுவாகவே எறும்புகள் உழைப்புக்கு பெயர்போனவை. எந்நேரமும் ஈடுபாட்டுடனும், சுறுசுறுப்பாக வேலை செய்யும் எறும்புகள் பல்வேறு கதைகளில் உழைப்பிக்கு எடுத்துக்கட்டுகளாகக் கூறப்படுகின்றன. தங்களை விட இருபது மடங்கு அதிக எடையினைத் தூக்கும் எறும்புகள், கூட்டுமுயற்சிக்கும், விடா முயற்சிக்கும் உதாரணமாகும்.
பெரிய அளவிலான பூச்சிகள், உணவுப்பொருட்களைக் கூட இரண்டு மூன்று எறும்புகள் எந்த வித சிரமமும் படாமல் தூக்கிச் செல்லும் காணொளிகள் அதிகம் வெளிவந்துள்ளன. ஒரு எறும்புகளின் கூட்டமானது ‘ராணுவம்’ என்று அழைக்கப்படுகிறது. ஒரு எறும்புகளின் கூட்டம் பாம்புகள் போன்ற பெரிய ஊர்வனவைகளை கூட எளிதில் வீழ்த்திவிடும்.
உருவில் சிறியதாய் எறும்புகள் இருந்தாலும், அவற்றின் பண்புகளாலும், தைரியத்தாலும் பெரியதாய் மதிக்கப்படுகின்றன. அவற்றின் பல்வேறு சாகசங்களை நாம் கண்டிருந்தாலும், ஒரு தங்கச்சங்கிலியினை எடுத்துச் செல்கிற செய்தியானது ஆச்சரியமானதுதான்.
உருவுகண்டு எள்ளாமை வேண்டும்; உருள்பெருந்தேர்க்கு அச்சாணி அன்னார் உடைத்து என்று அன்றே திருவள்ளுவர் கூறியுள்ளார். அதாவது, சிறியவை என்பதால் வலிமை குறைந்தவை என்று எண்ணுதல் கூடாது என்பதற்கு எறும்புகளே ஒரு சிறந்த உதாரணம்.
மக்களை கவரும் விமான நிலையம்- சிங்கப்பூரில் ஆச்சர்யம்!